
இரண்டு நாள்களாக பிரிக்கப்படாமலேயே இருக்கிறது தினசரி பேப்பர்.
உயிர்பெறும் வீடு
இயல்பு நிலை இழந்து
இன்னும் இறுக்கமாகவே இருக்கிறது
சாவு விழுந்த வீடு.
இரண்டு நாள்களாக
பிரிக்கப்படாமலேயே இருக்கிறது
தினசரி பேப்பர்.
எப்போதும் வாலாட்டிக்கொண்டே
அங்கும் இங்கும் ஓடும் நாய்க்குட்டி
அமைதியாக சுருண்டு படுத்திருக்கிறது.
வழக்கமாக
வாசல் மரத்தில் வந்தமரும்
தேன்சிட்டு இரண்டும்கூட
வழக்கத்திற்கு மாறாக
சத்தம் இடாமலும்
வந்த சுவடு தெரியாமலும்
பறந்து மறைகின்றன.
ஊரிலிருந்து வந்து சேர்ந்த
இரண்டு வயதுப் பேத்தி
வீடெங்கும்
மழலைக் குரலுடன்
இங்கும் அங்கும் தவழ...
மீண்டும்
மெள்ள மெள்ள
உயிர்பெற்று
அசையத் தொடங்குகிறது
ஜீவன் தொலைந்த
அந்த வீடு.
- கிணத்துக்கடவு ரவி

எளிதானதில்லை
தண்டவாளப் பிரதேசங்களில்
பறந்திடும் வேளை
குறுக்கிடும் தொடர்வண்டிகளின்
மோதலில் சிக்கிவிடாமல்
சட்டென விலகி
பறவைகள் தப்பிவிடுவதைப்போல
எளிதானதாக எப்போதுமே
இருப்பதில்லை
மிக மெதுவாகவே நகர்ந்தூறும்
மரவட்டைகளுக்கும் நத்தைகளுக்கும்!
- தி.சிவசங்கரி
அணிலாடும் வரிகள்
நெடுநாள்களாய்
திறக்காத சாளரத்தை
திறக்க நோ்ந்தபோது
அதனிடுக்கில் அணிலொன்று
கூடுகட்டிக் குஞ்சுகளோடிருந்தது
யாரும் பாா்ப்பதற்குள்
திறந்த சாளரத்தை மூடிவிட்டு
கூட்டை எடுத்து
இங்கு வைத்துவிட்டேன்
இந்த வாிகளெங்கும்
குறுகுறுவென ஓடித்திாிவன
அந்தப் பழைய அணிலின்
புதிய குஞ்சுகள்தாம்...
- வெள்ளூர் ராஜா
ரிமோட்டின் சிரிப்பு
அக்காவுக்கு டோரா
தம்பிக்கு சோட்டா பீம்
யார் எதைப் பார்க்க வேண்டும்
என்பதில் தொடங்கிய சண்டையில்
தூக்கி வீசப்பட்டு
இரண்டாய்ப் பிளந்துபோனது
தொலைக்காட்சி ரிமோட்
இப்போது
ரிமோட்டை யார் உடைத்தது
என்று தொடர்ந்த சண்டையை
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த
உடைந்த ரிமோட்டுக்கு
பொத்தான்கள் இருந்த இடத்தில்
பொக்கை வாய்ச் சிரிப்புகள்.
- மு.மகுடீசுவரன்
ஆயுதம்
காட்டுக் கோயிலில்
கம்பீரமாக வீற்றிருக்கும்
அய்யனார் கை
ஆளுயர அரிவாள் மீது
பட்டாம்பூச்சிகள்
வந்தமர்ந்து செல்கின்றன
அவ்வப்போது.
- மகா