சினிமா
தொடர்கள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

படியேறி வீட்டுத்திண்ணை வந்த அரணையின் மேல் பிசுபிசுப்பு

நெருப்பு

இறந்தது அறியாமல் கிடந்தார் கிழவர்

மார்பில் மாலைகள் சூடியபடி

வீடெங்கும் இறப்பின் வாசனை

விசாரிக்க வருபவர்களுக்கெல்லாம்

வருகை சொல்லிக் காதைப்பிளந்தது பறையொலி

பந்தலில் பத்திரிகை படித்தபடி சிலர்

செல்போனில் சிரித்தபடி சிலர்

எப்படி திடீர் என்று எனக் கேட்பவர்களுக்கு

ஒரே பதிலைச்

சொல்லிக்கொண்டிருந்தார்கள்

அப்பாவை யார் பார்த்துக்கொள்வது என்று நேற்றுவரை

அடித்துக்கொண்ட சாப்ட்வேர் மகன்கள்

எல்லோருக்குமாய்ச் சேர்த்து ஆடி

அசந்து உட்கார்ந்து

பறைமேளத்தைத் தீமூட்டிச் சூடாக்கினார்கள்

ஆட்டக்காரர்கள்!

- அருண்

அவரவர் எண்ணம்

படியேறி

வீட்டுத்திண்ணை வந்த

அரணையின் மேல் பிசுபிசுப்பு

தரையில் ஒட்டியிருக்குமெனும்

அருவருப்பில்

நீர்தெளித்துக் கூட்டிவிடுவேன்

பேருந்துப்பயணத்தில்

கைப்பிடியில்

பிறரழுக்கு ஞாபகத்தில்

வாளித்தண்ணீர் காலியாகும்

அழுக்கும் துடைப்பும்

அவரவர் மனம்பொறுத்து.

- குரும்பல்பொன்கிபாரதி

ஏக்கம்

நினைத்தால் பொழியவும் பொய்க்கவும்

வாய்த்திருக்கிறது வானுக்கு

பூப்பதும் ஏய்ப்பதும்

பூமியின் கையிலா இருக்கிறது

கடந்து போகும்

மேகங்களுக்கெல்லாம்

கிடந்து ஏங்குகிறது

துளிப் பூமி.

- வெள்ளூர் ராஜா

சொல்வனம்

குறி சொல்லிகள்

காலத்தைத் தொங்கு பையிலிட்டு

வீடுதோறும்

விநியோகிக்கிறார்

சாமக்கோடங்கி

வண்ணத்தில் தோய்ந்த துணிகளும்

எப்போதும் என்னவென்று தான் அறியாத

அணிகலன்களுமாகத்

தலையாட்டி நற்பேற்றை ஆமோதிக்கின்றன

பூம் பூம் மாடுகள்

தலைமுறைகளின்

பெரும்பாடு தோல் கிழித்து வெளிவர

கருத்த உடலில் சாட்டையால் அடிக்கின்றன

அனிச்சைக் கரங்கள்

பிழைப்புக்கான சூதுவாதுகளேதும்

அறியாப் பெருங்குடியினர்

சாமிகளை விளித்தலைகின்றனர்

ஊரடங்கின் உலர் பொழுதுகளில்

கட்டுண்ட நேரம்

வாக்குச் சொல்லி

வாழ்த்தும் குடுகுடுப்பையும்

நீள்தவம் இயற்றுகிறது

ஊர் வெயிலின் துணையோடு.

- கி.சரஸ்வதி