ஆனந்த விகடன் பொக்கிஷம்
கட்டுரைகள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

கவிதை

ரசனை

விர்ரென்று

பறந்துவிடத்தெரிந்தும்

பட்டாம்பூச்சிகள்

பறந்துவிடுவதில்லை

துரத்துவதை

ரசித்தபடியே

தாவித்தாவித்தான்

நகர்கின்றன

அன்பின்

ஊடலும் தேடலும்

ரசனையானவை.

- மங்கைமுருகன்

சொல்வனம்

தெய்வத்தின் கருணை

கூரையைப் பிய்த்துக்கொண்டு

கொடுக்கும் தெய்வத்திடம்

பிய்ந்த கூரையை

மாற்றித் தர மன்றாடிய

அன்றாடங்காட்சிக்கு

அருள் மழை

பொழியத் தொடங்குகிறது

தெய்வம்

ஆசி பெறுவதற்கான

பாத்திரங்களை

ஆங்காங்கே

எடுத்து வைக்கும்

அவனுடைய

வீட்டுக் கூரையின்

வால்பேப்பர்கள்

அனுதினமும்

மாறிக்கொண்டே

இருக்கின்றன.

- பா.ரமேஷ்

ஞாயிறு ஞானம்

வேகமாய் விடிந்த ஞாயிற்றை

இட்லி சட்டியில்

சுட்டுக்கொண்டிருக்கிறாள் கிழவி

அரைகுறை விழிப்பில்

அயிரை மீன் துள்ளல்

பேத்தி கட்டில் சந்தில்

அறக்கப்பறக்க

அநியாயம் பூசி இசை பழுக்க

வைத்துக்கொண்டிருக்கிறான்

சங்கீதத் தம்பி

அம்மாவுக்கு ஆயிரம் வேலை

அன்றும் அட்டெண்டென்சில்

அவளே முதலிடம்

அப்பா கறி எடுக்கக் கிளம்பியாயிற்று

சரக்குக்கு ஆறு மணிக்கும்

வழியுண்டு

எல்லாம் அறிந்தவர் அவர்

அங்கும் இங்கும்

ஓடிக்கொண்டிருக்கும்

அவ்வீட்டு ஞாயிற்றுக்குத்தான்

நிற்கவும் நேரமில்லை

செய்யவும் வேலையில்லை.

- கவிஜி

சொல்வனம்

கனா

ஒரு பூங்காவின்

இருக்கையொன்றில்

கரையருகே சுருண்டுவரும்

அலையைப்போல்

கால்மடக்கிச் சாய்ந்தபடி

அமர்ந்திருந்தாள் என்னருகில்

பின்பொரு பிறைநிலவென

கால்களை நீட்டி வளைந்தவாறு

அமர்ந்துகொண்டாள்

அந்திச் செவ்வானத்தை

சந்தனத்தில் குழைத்தெடுத்த

அவள் பாதங்களைச் சற்றே

பற்றிக்கொள்ளச் சம்மதித்தாள்

காரணம் ஏதுமின்றிக்

கண்ணீர் உகுத்தாள்

கோவில் மணியொத்த கணீர்க்

குரலில் ஏதேதோ பேசினாள்

கண்விழித்துப் பார்த்தபோது

காணாமல் போயிருந்தாள்

இன்னும் கொஞ்சமேனும்

நீண்டிருக்கலாம் அந்தக் கனவு.

- பழ.மோகன்