
உன் விழிகளிலிருந்து பரவும் காட்டுப்பூவின் மணம் தொலைவுகளைக் கடந்து என் சுவாசம் நிறைக்கிறது ஒளிக்கு நறுமணம் உண்டென்பதை உன்னிருவிழிகளே சொல்லிச் செல்கின்றன.
எழுதியெழுதி அழிக்கிறேன்
என் அன்பின் மனச்சாயலையொத்த
ஒரு வார்த்தையும் கிடைக்கவில்லை.
அந்தியில் கூடு திரும்பிய
பறவையின் சிறகில் இருந்து
விழுந்த இறகொன்றை
உனக்கனுப்புகிறேன்.
வானமளந்த
அதன் கதையைச் சொல்ல அல்ல.
கூடு திரும்பும்
அதன் அன்பைச் சொல்ல.
உன் விழிகளிலிருந்து
பரவும் காட்டுப்பூவின் மணம்
தொலைவுகளைக் கடந்து
என் சுவாசம் நிறைக்கிறது
ஒளிக்கு நறுமணம்
உண்டென்பதை உன்னிரு
விழிகளே சொல்லிச் செல்கின்றன.
அரை விழிப்பில்
பால்குடிப் பிள்ளையைத்
துழாவித் தேடி
அணைத்துக்கொள்ளும்
தாயைப்போல்
நினைவுகள்
உன்னை அணைத்துக்கொள்கின்றன.
காரிருளுக்குள் அழைத்துச் செல் அன்பே
அந்தியின் மேல் படரும்
துயரத்தின் சாயல்
மேலும் என்னைத் துயருறச் செய்கிறது
சோளக் கதிரின் பால்மணம் வீசும்
இருளுக்குத்தான் நம் மணம்.
எவ்வளவு பிடிக்கும்
எப்போ பார்ப்போம்?
எதற்கெடுத்தாலும்
குழந்தையைப்போல்
கேள்விகளும் சிணுங்கலும்
பிடிவாதமும்தானா?
இன்னுமா புரியவில்லை,
குழந்தைகளாகத்தானே
நாம் காதலர்களானோம் அன்பே.

பசித்த செடிகளுக்கு
நீருற்றுகிறாய் நீ
அதன் புன்னகையைப்
பார்த்துக்கொண்டிருக்கிறேன் நான்.
கல்நாகசுரத்தை
வாசித்து வை
ஒளிரும் அதன் நாதத்தில்
சமைந்த கற்சிலையாக
வேண்டுமெனக்கு.
கொன்றை பூக்கும் பருவத்தில்
நீயென்னைப் பிரிந்து
சென்றிருக்கலாம்
ஒளிரும் மஞ்சள் கொன்றை
பூவாகத் தொலைந்துபோவது
எளிதெனக்கு.
விலகி நில் என்கிறேன்
உன் நினைவுகளிடம்
மடியில் அமர்ந்து
கழுத்தையும் கட்டிக்கொண்டு
போதுமா என்கிறது.