
News
இளம்பிறை - கவிதை
உன் கருணையின்
துளிச் சொல்லும் விழாத
வறண்ட அகத்துடன்
இந்தக் கடும்பாலையை
கடக்க முடியுமா எனத்
தெரியவில்லை
நெகிழ் நிலமாய்
விளைந்த உன் நெஞ்சை
கல்லாக்கிய
எம் உயிர் நேசம்
எரிந்தெரிந்து எரிக்கட்டும்
என்னை மட்டும்.

எத்தனைமுறை
விரட்டித் துரத்திவிட்டாலும்
போக முடியாமல் மருகி நின்று
நிரூபிக்க முடியாத
மெய்யுணர்வாக
நின்று தவிக்கும்
எனது ஆன்மாவின்
பேராவல்
எப்படியேனும்
ஒரு பறவையாகி
உன் வீட்டோர மரக்கிளையில்
அமர்ந்து
உன்னைப் பார்த்துப் பார்த்து
பாடிக்கொண்டே இருக்கவேண்டும்
என்பதன்றி வேறொன்றுமில்லை.