இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையின் வளர்ச்சிக்கு சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளான் என்கிற எஸ்.ஐ.பி முதலீட்டு முறை ஒரு முக்கியமான காரணமாக உள்ளது. சாதனை அளவாக கடந்த மே மாதத்தில் ரூ.12,286 கோடி எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஏப்ரல் மாதத்தைவிட ரூ.423 கோடி அதிகமாகும்.

2022 மே மாத இறுதி நிலவரப்படி, இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் தொகை ரூ. 37.4 லட்சம் கோடியாக உள்ளது. இது 2021 மே மாதத்துடன் ஒப்பிடும்போது 12.60% வளர்ச்சியாகும். மொத்த மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளின் (Folio) எண்ணிக்கை இதுவரைக்கும் இல்லாத வகையில் 13.33 கோடியாக அதிகரித்துள்ளது. ஓராண்டுக்கு முன் இந்த எண்ணிக்கை சுமார் 10 கோடியாக இருந்தது.
மொத்தமுள்ள மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளில் சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு 10.6 கோடியாக உள்ளது.
5.48 கோடி எஸ்.ஐ.பி கணக்குகள்...
எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யப்படும் கணக்குகளின் எண்ணிக்கை 2022 மே மாதம் 5.48 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஏப்ரல் மாதத்தில் 5.39 கோடியாக அதிகரித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் 19.74 லட்சம் எஸ்.ஐ.பி கணக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எஸ்.ஐ.பி முறையில் செய்யப்பட்டு மே மாத நிலவரப்படி நிர்வகிக்கும் தொகை ரூ.5.65 லட்சம் கோடியாக உள்ளது.
இந்தியக் கடன் சந்தை மற்றும் பங்குச் சந்தை மே மாதத்தில் அதிக ஏற்ற இறக்கத்தில் இருந்தது. இந்த நிலையிலும், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறைக்கு குறிப்பாக, எஸ்.ஐ.பி முறையில் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் செய்யப்பட்ட முதலீடு அதிகரித்துள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் ஈக்விட்டி ஃபண்டுகளில் நிகரமாக செய்யப்பட்ட முதலீடு ரூ.18,500 கோடியாக உள்ளது. இது முந்தைய ஏப்ரல் மாதத்தில் ரூ.15,890 கோடியாக இருந்தது.

முன்னணியில் ஃபிளெக்ஸி கேப் ஃபண்டுகள்...
மிக அதிகபட்சமாக ஃபிளெக்ஸி கேப் ஃபண்டுகளில் ரூ.2,900 கோடி நிகரமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. லார்ஜ்கேப் ஃபண்டுகள், லார்ஜ் & மிட்கேப் ஃப்ண்டுகள் மற்றும் தீமெட்டிக் ஃபண்டுகளில் தலா ரூ.2,000 கோடிக்குமேல் நிகர முதலீடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஈக்விட்டி திட்டங்களில் (ஈக்விட்டி, ஹைபிரிட், தீர்வு அடிப்படையிலான ஃபண்ட்) சிறு முதலீட்டாளர்களின் நிகர முதலீடு 2022 மே மாதத்தில் ரூ. 18,49,896 கோடியாக உள்ளது. இது 2021 மே மாதத்தைவிட 26.83% அதிகமாகும்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மீது சிறு முதலீட் டாளர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதால், அவர்கள் சந்தையின் ஏற்ற இறக்கத்தைத் தாண்டி நீண்ட கால நோக்கில் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்துவருகிறார்கள்.
கடன் ஃபண்டுகள்...
ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகித உயர்வு காரணமாகக் கடன் ஃபண்டுகளிலிருந்து மே மாதத்தில் நிகரமாக ரூ.32,700 கோடி மதிப்புள்ள தொகையை முதலீட்டாளர்கள் வெளியே எடுத்திருக்கிறார்கள். இதில் மணி மார்க்கெட் ஃபண்டுகளிருந்து ரூ.14,600 கோடி, ஷார்ட் டூரேஷன் ஃபண்டுகளிலிருந்து ரூ.8,600 கோடி, ஃப்ளோட்டர் ஃபண்டுகளிலிருந்து ரூ.5,300 கோடி வெளியேறி இருக்கிறது.
கலப்பின ஃபண்டுகளில் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகளில் ரூ.2,000 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்ட் மற்றும் ஆர்பிட்ரேஜ் ஃபண்டு களில் ரூ.1,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

எஸ்.ஐ.பி சராசரி...
எஸ்.ஐ.பி சராசரி முதலீட்டை எடுத்துக்கொண்டால் போன்பே (PhonePe) மூலமான முதலீடு மிகக் குறைந்த அளவாக மாதம் ரூ.816 உள்ளது. இதுவே பிரிவாடோ கேப்பிடல் வென்ச் சர்ஸ் (Privado Capital Ventures) மூலமான சராசரி எஸ்.ஐ.பி மாத முதலீடு ரூ.7.80 லட்சமாக உள்ளது.
மிக அதிகமாக என்.ஜே இந்தியா இன்வெஸ்ட் நிறுவனத்தின் மூலம் ரூ.36,582 கோடி மதிப்புள்ள எஸ்.ஐ.பி முதலீடு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. (பார்க்க, மேலே உள்ள அட்டவணை)
சிறு முதலீட்டாளர்கள் ஈக்விட்டி மற்றும் ஹைபிரிட் ஃபண்டுகளில் நீண்ட கால நோக்கில் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்குக் காரணம்!