
News
கபிலன், ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்
மண்தாமரை பூத்தது
குயவனின் சேற்றில்
சலிக்கப்பட்ட
ஆத்துமணல் கலந்த
களிமண்ணில்
கொஞ்சம் வியர்வை தெளித்து
சக்கரம் நடுவே
குத்தவைத்து
பதினாலுமுறை சுத்தியதில்
ஆறுபானை செய்யலாம்
என்றார்
கொசப்பேட்டை தொழிலாளி
நூலால் அறுத்து
பின்புற ஓட்டையைத்
தட்டித்தட்டி
பூரணம் செய்வர்

காய வைத்த பானையை
யானைச் சாணம்
வைக்கோல் கலந்து
சூளையில் வேக வைத்ததில்
உடைந்ததுபோக உருப்படியானவற்றை
சுமந்துகொண்டு
மயானத்தை விட்டு வெளியேறும்
மனிதனாய்
விற்பனைக்கு வீதி வருவர்
உழைப்பாளியின் உண்டியலைத்
தட்டிப்பார்த்து
அநியாயத்துக்கு விலை கேட்பர் கொடுப்பதை
கோவணத்தில் முடிபோடும்
அம்மண ஆன்மா
காவிச்சாயம் பூசப்பட்ட பானையை
செங்கல் அடுப்பில் எரித்து
பொங்கல் கொண்டாடுவது
தமிழர் திருநாள்.