
செடிகளில் மலர்ந்த பூக்கள் வாடிவிட்டுப்போகட்டும்... இங்கு ஒரு முகத்தில் மலர்ந்ததே!
ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது
தனி வீடு
ஆலஞ்செடியை வளர்த்து
ஆளாக்கிக்கொண்டிருக்கிறது
அந்தத் தனி வீடு...
ஒவ்வொரு விரிசலுக்கும்
புதுத்தளிர் ஒன்றைப்
பரிசளித்தபடியே இருக்கிறது செடிக்கு
பழைமையின் நெஞ்சைப் பிளந்தவாறே
உள்ளிறங்கும் வேர்களை
வஞ்சம் ஏதுமின்றி வாங்கிக்கொள்கிறது சுவர்
விழுதுகள் பூமி தொடத் தவிக்கும்
அந்நாளில் தரைபடர்ந்து வழிவிடக் கூடும்
அன்பாலான அந்தக் கட்டடம்.
- கி.சரஸ்வதி, ஈரோடு
*****

முக மலர்
வீட்டைச் சுற்றியும்
பூச்செடிகள் இருந்தபோதும்
கூடையில் பூக்களோடும்
முகத்தில் ஏக்கத்தோடும்
அதை மறைக்கும்
சிரிப்போடும் நின்றிருந்த
சின்னஞ்சிறுமியிடம்
பேரமின்றி வாங்கினேன்
நிறைய பூக்களை...
செடிகளில் மலர்ந்த பூக்கள்
வாடிவிட்டுப்போகட்டும்...
இங்கு ஒரு முகத்தில் மலர்ந்ததே!
- பா.ஜோதிமணி, திருப்பூர்
கவிதை படைப்பவரா நீங்கள்..?
உங்கள் எண்ணங்களை வார்த்தை வண்ணங்களாக்கி, `இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா,
சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.
பிரசுரமாகும் கவிதைகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு! சிறந்த கவிதைக்கு சிறப்புப் பரிசு!
அனுப்ப வேண்டிய முகவரி: கவிதைகள், அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com