சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

ஒரு சொல் மந்திரம்!

சாலமன் பாப்பையா
பிரீமியம் ஸ்டோரி
News
சாலமன் பாப்பையா

இயற்கையைத் தெய்வமாய் காணக் கிடைத்த வாய்ப்பு.

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

தமிழ்ப் பேச்சு மேடைகளில் அரை நூற்றாண்டுக்கு மேலாக அசைக்க முடியாத மாபெரும் ஆளுமை. அடுத்த தலைமுறைக்கு தித்திக்கும் தமிழை எடுத்துச்செல்லும் ஆசான். பட்டிதொட்டியெங்கும் `பட்டிமன்றம்' என்ற கலையைக் கொண்டு சேர்த்த தமிழின் மூத்த மகன் சாலமன் பாப்பையா... அவரிடம் ஒரே ஒரு சொல் கொடுத்தோம்... அதை மந்திர வாக்கியங்களாக மாற்றிவிட்டார்.

நடுவர்: விவேகத்தை மன வயலில் விதைப்பவர்.

அம்மா: பொங்கும் பாசத்தின் சங்கம ஒலி.

அப்பா: தடுமாறும்போது தாங்கி உயர்த்துபவர்.

மனைவி: விலங்கு மனத்திலும் வெளிச்சம் ஏற்றும் விளக்கு.

குழந்தை: மனதைப் பிசைந்து மயக்கும் அழகு.

மதம்: மானுடத்தைப் பிளக்கும் கோடரி.

புரட்சி: இருட்டில் வழிகாட்டும் தீபம்.

அரசியல்: பொதுநலம் பேசும்; சுயநலச் சேற்றில் விழும்.

திருக்குறள்: உலகை அணைக்கும் ஒப்பற்ற தமிழ்ச் சித்தாந்தம்.

தொல்காப்பியம்: தொல் தமிழர்களின் பல்துறைப் பள்ளிக்கூடம்.

கல்வி: அறிவும் அடக்கமும் அளிக்கும் அருமருந்து.

நட்பு: ஒத்த உணர்ச்சிச் சோலையில் பூக்கும் மலர்.

காதல்: ஏதோ ஒரு கவர்ச்சியில் முளைவிட்டு, அக அழகால் வளர்வது.

ஒரு சொல் மந்திரம்!

மன்னிப்பு: மனிதனை தெய்வமாக்கும் மந்திரம்.

துரோகம்: துன்பப்படுத்த எண்ணி, துன்பத்தினுள் சிக்குவது.

முதுமை: முந்தைய தவறுகளைத் திருத்தக் கிடைத்த வரம்.

இளமை: பேதமையும் கற்பனையும் பின்தொடரச் செய்யும் பயணம்.

முயற்சி: அறிவர்களின் போர்வாள்.

ஆசை: தன்னல வயலில் வளரும் களை.

சினிமா: பல்துறைக் கலைஞர்களின் பல்கலைக்கழகம்.

புத்தகம்: கல்வியாளர்களின் தங்கச்சுரங்கம்.

பயணம்: இயற்கையைத் தெய்வமாய் காணக் கிடைத்த வாய்ப்பு.

தானம்: மனிதம் பயிராகும் மனம்.

ஆசிரியர்: அறியாமை இருட்டை அகற்றும் அடிவானத்து இளம்பரிதி.

அடக்கம்: மனிதனை உயர்த்திக்காட்டும்.

பேச்சு: மானுடத்தைப் பிணைக்கும் மாயச் சங்கிலி.

பட்டிமன்றம்: `கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும்' கலை.

'பட்டிமன்றம்' ராஜா: ஏழைக்கு இரங்கும் இதயம்.

பாரதி பாஸ்கர்: ஞானத்தை நாடிச் செல்லும் நல்ல மகள்.

இசை: இரும்பு மனிதனையும் இளகச் செய்யும் இறை ஒலி.

அருவி: மலையின் தனிமையைப் போக்கும் மத்தள ஓசை.

நாடகம்: கலைகளின் காட்சிக் கூடாரம்.

விழுது: பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லும் ஆசிரியர்.

நினைவுகள்: கடந்த வாழ்க்கை, கண்ட காட்சிகளின் பதிவுகள்.

பணம்: பாச வேர்களைக் கல்லி எறியும் மோசமான ஆயுதம்.

மனிதம்: இறைவனை நோக்கி நகர்த்தும் உந்து சக்தி.

சிரிப்பு: உடல்நலத் தோட்டத்தில் உதிரும் மலர்கள்.

அறம்: தவறாதபடி எச்சரிக்கும் மணி ஒலி.

நாவல்கள்: வாழ்க்கையின் படப்பிடிப்பு.

கவிதை: சொற்களின் அழகுக் கோலம்.

சிறுகதை: சில்லுக் கண்ணாடியில் ஒரு சொல் ஓவியம்.

பேனா: நிலவின் குளிரும், நெருப்பின் தகிப்பும் நிறைந்து நெஞ்சங் கவர் தூரிகை.

ஒரு சொல் மந்திரம்!

நேரம்: அறிஞர்களின் சேமிப்பு; மூடர்களின் வீண் செலவு.

விகடன்: சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும் சித்திரப் புத்தகம்.

கோபம்: மனநோயின் அறிகுறி.

பொறுமை: அறிவாளிகளின் அணிகலன்.

பொறாமை: மூடர்களின் சறுக்கல்.

செல்போன்: வீட்டு விலங்கைக் காட்டு விலங்காக்கும் விசித்திரம்.

கண்ணீர்: பாசப் புதையலைப் பளிச்செனக் காட்டும் ஒரு துளி.

மது: மகிழ்ச்சி தருவதுபோல் மறைந்து கொல்லும் எதிரி.

நேர்மை: ஒளியின் வழியில் நடப்பது.

எதிரி: நம் இதயத்தோடு ஒட்டப் பசையற்ற பொருள்.

கடவுள்: நாட்டுக்கு ஒரு பெயரில் நம்மை ஆட்கொள்ளும் நம்பிக்கை.

வாழ்க்கை: அடித்தல், திருத்தல் நிறைந்த சொந்தக் கட்டுரை.

புகழ்: செருக்கை வளர்த்து விழச் செய்யும் சறுக்கு மரம்.