
- பார்வதி
விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!
அன்றொரு நாளும் மற்ற நாள்களும்
நான் இறந்துபோயிருந்தேன்
ஒவ்வாத உணவருந்தியபோது
அலாரம் அலறாதபோது
தேநீரில் சீனி குறைவாயிருந்தபோது
டி.வி ரிமோட் கிடைக்காதபோது
நைட்டியில் பொத்தல் விழுந்தபோது
முதல் நரைமுடியைப் பிடுங்கியபோது
சணல் கம்மல் தொலைந்தபோது
எதிர் வீட்டம்மா `ஏய்' என விளித்தபோது
வாசனைத் திரவியத்தின் விலை பார்த்தபோது
எல்லாம் பார்த்தாகிவிட்டதென நினைக்கையில்
இன்றும் இறந்துகொண்டிருக்கிறேன்
கிடைக்காத சம்பளத்தை நினைத்து

வெளிவராத என் படைப்பை நினைத்து
அப்பாவின் கடைசி மூச்சை நினைத்து
உதவியென்றதும் ஓடியவர்களை நினைத்து
காரணமற்றுக் கைவிட்ட மருத்துவரை நினைத்து
சுணங்கிக்கொண்டிருக்கும் சேமிப்பை நினைத்து
என் எண்ணை பிளாக் செய்த பாஸ்கரை நினைத்து
நிலாவும் பிடிக்காது போன நிலையை நினைத்து
கவிதை கைவராமல் போனதை நினைத்து
இருப்புகளும் இறப்புகளும் எப்போதும் உண்டு
வடிவங்கள்தான் வெவ்வேறு என்பதை
தாமதமாய் எண்ணித் தெளிந்ததை நினைத்து.