
கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும்தான் சுடலை மாடசாமி வேட்டைக்குப் போகிறார்
பூனையின் கீறல்
கை தொட்ட கறுப்புப் பூனை
மொத்தமும் கறுப்பென்று
சொல்லமுடியாது
கன்னத்திலும் முதுகிலும் காலிலும்
கொஞ்சம் கொஞ்சம் வெள்ளை
இருந்தது
வலுக்கட்டாயமாய்
தூக்கி மடியில் அமர்த்திக்கொண்டேன்
இப்போது முன்னங்கால்
நகங்களை சற்று
வெளிக்காட்டத் தொடங்கியது
நாய்களைப்போல் அல்ல
பூனைகளின் வாலாட்டுதல்
அது சீற்றத்தின் வெளிப்பாடு
மெல்ல வால் அசைத்தது
வேறு வழியில்லை
இறக்கிவிட்டே ஆகவேண்டும்
இப்போது இரண்டு நகங்கள்
என் சட்டையில் மாட்டியுள்ளன
அதுவே இறங்க முயல்கிறது
இதோ இறங்கிவிட்டது
இனி
மார்பில் ஏறி
மனதைக் கீறாமல்
பார்த்துக்கொள்ள வேண்டும்.
- அரவிந்தன்

இரவின் கரங்கள்
கண்ணுக்கெட்டிய
தூரம் வரைக்கும்தான்
சுடலை மாடசாமி
வேட்டைக்குப் போகிறார்
அதன்பின்பு
தீப்பந்தம்
இரவின் கரங்களுக்கு
மாறிக்கொள்கிறது.
- மகேஷ் சிபி
****
காற்றின் விளையாட்டு
வீட்டின் பின்பக்கப் புல்வெளியில்
பொம்மை லாரியின் முதுகில்
புற்களை அள்ளிப்போட்டு
அங்குமிங்கும் ஓட்டி
விளையாடிய குழந்தைகள்
பின் மாலையில்
உறங்கச்சென்றுவிட்ட பிறகும்
உறங்கச்செல்லாத குழந்தையாய்
இரவெல்லாம்
லாரியை நகர்த்தி
விளையாடிக்கொண்டிருக்கிறது காற்று!
- ராம்பிரசாத்
****
விளிம்பில் சுடரும் உறவுகள்
வீட்டிற்கு உள்ளே ஏற்றும்
விளக்குகளைவிட
வெளியே வைக்கும் விளக்குகள் மீதுதான்
கவனம் அதிகமாக இருக்கிறது
அறைகளுக்குள்
நிதானமாக எரியும் விளக்குகள் பற்றி
கவலையே இல்லை
வாசலில்
காற்றுக்கும் தூறலுக்கும்
சலனமடையும் தீபத்தை
கரம் குவித்துப் பாதுகாப்பதிலேயே
மனம் அழுந்தித் தவிக்கிறது
மனதிற்குள் ஒட்டாமல்
விளிம்பில் சுடர்கின்ற உறவுகளையும்
இப்படித்தான்
போராடித் தக்கவைத்துக்கொள்ள
வேண்டியதாய் இருக்கிறது
வாழ்வில்.
- தி.கலையரசி
****
சமுத்திரத்தின் கிளைகள்
மழை பெய்து ஓய்ந்தபிறகு
மரத்தின் இலைகளில்
தொங்கிக்கொண்டு இருந்தன
சமுத்திரத்தின் கிளைகள்.
- பெ.பாலசுப்ரமணி