
காலத்தின் பொட்டலம்
நெகிழிப்பையில் கட்டிய
பார்சல் தேநீரை
இருவிரல்களுக்கு இடையே பிடித்து
சுமந்துவருகிறான்
தலைமுறைகள் பலவாய்
பால்மாடுகள் வளர்த்த
குடும்பத்தின் நிகழ்காலச் சிறுவன்.
அவன் நினைவுகளில்
ஓடிக்கொண்டிருக்கிறது
அப்பா சொல்லி விளக்கியிருந்த
பால் நன்றாய்ச் சுரந்திருக்கும்
பால்மாட்டின் மடிக்கு
உவமையாய்
தேநீர் நிரம்பிய
நெகிழிப்பை பார்சல்.
- சாமி கிரிஷ்

தூளி
மகனும் மகளும்
அன்பளித்த புடவைகளை
பேரன் பேத்திகளுக்குத்
தூளிகளாக்கிவிடுகிறார்கள்
அம்மாக்கள்.
- திருவெங்கட்
தனிமையின் நிழல்
நிலவு இருந்தும்
என்னால் பாட இயலவில்லை.
ஒற்றைப்பனையும்
இல்லாத சூழலை
எப்படி ஏற்றுக்கொள்ளும்
தேய்ந்த நிலவு?
- ச.ப.சண்முகம்
மாறிய கதை
வறுமையின்
பொருட்டு
மந்திரக் குழலெடுத்து
அவன்
ஊதத் தொடங்குகிறான்
வீட்டிலிருந்த
பீடை எலிகள்
ஒவ்வொன்றாய்
வெளியேறத் தொடங்குகின்றன.
மெதுவாய்
பின்தொடர்ந்த
எலிகளோடு
சமூகத்தில் அவனை
வறுமைக்குத் தள்ளிய
அத்தனை எலிகளும்
அணிவகுப்பில்
சேர்ந்துகொண்டன.
ஆறு ஒன்று
எதிர்ப்படுகிறது
எலிகள் அத்தனையும்
வீடு திரும்பிவிட்டன.
- பா.ரமேஷ்
பாசியாடை
ஓடாமல் தேங்கிய நீரினை
வெட்கம் பாடாய்ப் படுத்தும்
ஆடையாய்ப் பாசியை
அவசரமாய் நெய்து
தன் அங்கத்தில் உடுத்தும்.
- வல்லம் தாஜுபால்