
ஒரு விடுமுறை நாள். நண்பரின் வீட்டுக்குக் குடும்பத்துடன் சென்றிருந்தேன். அங்கிருந்து அருகிலிருக்கும் ஒரு சுற்றுலாத்தலத்துக்குச் செல்வதாகத் திட்டம்.
நாங்கள் சென்ற பிறகுதான் அவர்கள் புறப்படத் தயாரானார்கள். நண்பருக்கு ஒரு மகன்; ஒரு மகள். இருவரும் குறும்புக்காரர்கள். வீட்டின் சுவர்களில் அவர்களின் கையெட்டும் உயரம்வரை ஓவியக் கிறுக்கல்களை நிறைத்துவைத்திருந்தார்கள். உடலைவிடப் பெரிய தும்பிக்கைகொண்ட யானை; மீனுடன் பேசிக்கொண்டிருக்கும் மான் என வித்தியாசமான ஓவியங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நண்பர் என்னிடம், நான்காம் வகுப்பு படிக்கும் தன் மகனுக்கு ஒரு சட்டையைப் போட்டுவிடச் சொன்னார். அவனும் அதற்குத் தயாராக நின்றிருந்தான்.

சட்டையின் கைத் துளையில் அவனின் கையை நுழைக்கச் செய்தேன். அடுத்த கையை அவன் கஷ்டப்பட்டு நுழைத்தான். ஆனால், பொத்தான்களைப் போட முடியவில்லை. ``அடடா... சட்டை சின்னதாயிடுச்சே” என்றேன். அறைக்குள்ளிருந்த நண்பர் வந்து பார்த்துவிட்டு, ``பீரோவிலிருந்து எடுக்கறப்பவே நினைச்சேன்... `சட்டை சின்னதாகியிருக்கும்’னு. போன பொங்கலுக்கு வாங்கினது. கழட்டிடுங்க. நான் வேற சட்டையை எடுத்துட்டு வாரேன்’’ என்றார். நான் சட்டையைக் கழற்றச் சென்றபோது, என் கையை உதறிவிட்ட அவன், எங்கள் இருவரையும் முறைத்துக்கொண்டே கோபமாகச் சொன்னான்...
``சட்டை சின்னதாகலை... நான்தான் பெரியவனாகிட்டேன்.”
மிட்டாய் மொழி: வழக்குச் சொற்களை ஆராயாமல் அப்படியே பயன்படுத்தக் கூடாது.