நாமக்கல் மாவட்டம், மோகனூரில் வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் இன்று காலை திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் வீடு முழுவதும் தரைமட்டமானது. இது குறித்து தகவல் அறிந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். தீயைக் கடும் போராட்டத்துக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டுவந்ததை அடுத்து, உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், ஐந்து பேர் படுகாயமடைந்தனர் எனக் கூறப்படுகிறது.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், பட்டாசுக்கடை உரிமையாளர் உட்பட மேலும் இருவர் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதையடுத்து, இந்தப் பட்டாசுக்கடை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை நான்காக அதிகரித்திருக்கிறது. விபத்து குறித்து, மோகனூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த வெடி விபத்தில் பட்டாசுக்கடை உரிமையாளர் தில்லைகுமார், மூதாட்டி பெரியக்காள், தில்லைகுமாரின் மனைவி பிரியா, தில்லைகுமாரின் தாய் செல்வி ஆகியோர் பலியாகியிருக்கின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.