மத்தியப்பிரதேச மாநிலத்தில், அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் பேருந்து ஓட்டிக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உயிரிழந்த ஓட்டுநர் ஹர்தேவ் பால் (60) பல வருடங்களாக பெருநகர பேருந்து சேவையில் பணிபுரிந்தவர்.

இந்த நிலையில், ஜபல்பூரிலுள்ள போக்குவரத்து சிக்னல் அருகே நடந்த துயரச் சம்பவத்தில், பேருந்து மோதி படுகாயமடைந்த முதியவர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவரின் அடையாளம் பற்றிய விவரம் ஏதும் அறியப்படவில்லை.
மேலும் இந்த விபத்தில், சாலையிலிருந்த இருசக்கர வாகனங்கள், எலெக்ட்ரிக் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மீது பேருந்து மோதியதில் பயணிகள், இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். அதுமட்டுமல்லாமல், போக்குவரத்து சிக்னலின் சிசிடிவி கேமராவில் பதிவான இந்த விபத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன.