புளிய மரத்தில் மோதிய வாகனம்! - அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளருக்கு நேர்ந்த துயரம்

புதுக்கோட்டை அருகே பொலிரோ வாகனம் புளியமரத்தில் மோதிய விபத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர், டிரைவர் இருவரும் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரின் மகன் பவ் (எ) வெங்கடேசன் (31). இவர் கடந்த 8 ஆண்டுகளாகத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக இருந்து வந்தார். மேலும், இவர் அ.தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டத் தலைவராகவும் இருந்தார்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் நேற்று மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஒன்றிய ஊராட்சி குழுத் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க-வினருக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து கூறினார். பின்னர், எம்.ஜி.ஆர், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு இரவு சென்னைக்கு சென்றார்.
அமைச்சர் விஜயபாஸ்கரை திருச்சி விமான நிலையத்தில் விட்டுவிட்டு பொலிரோ காரில் அவரது சொந்த ஊரான பரம்பூருக்கு வெங்கடேசன் திரும்பிக்கொண்டிருந்தார். கிளிக்குடி வீரபெருமாள்பட்டி அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த அவரது கார் எதிர்பாராதவிதமாக புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அமைச்சரின் தனி உதவியாளர் வெங்கடேசன் மற்றும் காரை ஓட்டிச்சென்ற இடையபட்டியைச் சேர்ந்த செல்வம் (38) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து அருகே இருந்தவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த வெங்கடேஷ், செல்வம் ஆகிய இருவரின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அன்னவாசல் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.