சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் பெங்களூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவரின் மகன் சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துவருகிறார். தினமும் பள்ளி வேனிலேயே சென்றுவருவது வழக்கம். அதேபோல இன்று காலை பள்ளிக்குச் சென்ற மாணவன், பள்ளி வளாகத்திலேயே வேன் மோதியதில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக வேன் ஓட்டுநர் பூங்காவனம் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதோடு, விபத்து நடந்த வேனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து நடைபெற்ற விசாரணையில், பள்ளி வளாகத்தில் மாணவர் இறக்கிவிடப்பட்டிருக்கிறார். இறங்கிச் சென்ற மாணவன் மீண்டும் வேனுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது வேன் வந்துகொண்டிருந்த மாணவன் மீது மோதியுள்ளது. விபத்தில் சிக்கிய மாணவர் வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மாணவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். தற்போது மாணவரின் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. விபத்து எப்படி நடந்தது என்பது தொடர்பாகப் பள்ளி நிர்வாகம் சார்பில் எந்த உரிய விளக்கமும் அளிக்கப்படவில்லை என்று மாணவரின் உறவினர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். விபத்து நடந்தது குறித்து விசாரிக்க, பள்ளி நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். நமது அழைப்பை எடுத்தவர்கள், இந்த விபத்து தொடர்பாகப் பேசியதும் அழைப்பை உடனடியாகத் துண்டித்துவிட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக வளசரவாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனத்தில் உதவியாளர் ஒருவர் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. அந்த விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டனவா என்பதெல்லாம் விசாரணை முடிவில்தான் தெரியவரும். காலையில் பள்ளிக்குச் சென்ற மாணவர் பள்ளி வளாகத்திலேயே வேன் மோதி உயிரிழந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.