திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ். இவர் நத்தம் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படைவீரராக வேலை பார்த்துவருகிறார். ராகேஷ், அவரின் இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பேருடன் திருப்பதிக்குச் சென்றுவிட்டு காரில் வீடு திரும்பியுள்ளார். இன்று காலை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பி.கே அகரம் பகுதி அருகே கார் வந்துகொண்டிருந்தபோது, திடீரென காரிலிருந்து புகை வரத் தொடங்கியிருக்கிறது. அதைப் பார்த்து பதறிப்போனவர்கள், காரை ஓரங்கட்டி இறங்க முயன்றனர். அதற்குள்ளாக புகைந்துகொண்டிருந்த கார் திடீரென மளமளவென தீப்பற்றி எரிய ஆரம்பித்திருக்கிறது.

தீப்பற்றியதில் காரின் கதவுகளைத் திறப்பதில் சிரமம் ஏற்பட, ஒருவழியாக போராடி சிறு தீக்காயங்களுடன் காரிலிருந்த குழந்தைகள் உட்பட ஆறு பேரும் உயிர் தப்பினர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் காரிலிருந்த தீயை அணைத்ததோடு, காயமடைந்தவர்களை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இதனால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்தில் சிறிய பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து சிறுகனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ‘காரிலிருந்த பெட்ரோல் லீக் ஆகி, சூடான இன்ஜினில் பட்டதன் காரணமாகக்கூட கார் தீ பிடித்திருக்கலாம்’ எனக் கூறும் போலீஸார், இந்த விபத்துக்கு வேறு என்னவெல்லாம் காரணமாக இருக்கலாம் என்பது குறித்து, தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.
