விவசாயிகள் இயற்கை வேளாண்மை முறையில் மா சாகுபடியில் அதிக வருவாயை ஈட்டலாம், சரியான ஊடு பயிர்களை சரியான பருவத்தில் தேர்வு செய்து விதைத்தால் அதிக லாபம் பெறலாம் இதற்கான வழிமுறைகளைப் பார்ப்போம்.
ஒவ்வொரு பகுதியிலும் இன்று இயற்கை வேளாண் முறைகள் கடைபிடிப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இயற்கை வேளாண்மை செய்து வரும் விவசாயிகள் தங்களுடைய நிலத்திற்கு அங்ககச்சான்று பெற முன்வர வேண்டும். இந்த உத்தி மூலம் ஏற்றுமதி செய்தும் லாபம் பெற வழியுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
குறிப்பாக “அல்போன்சா” ரகம் காதர் என்றும், குண்டு என்றும் பாதாமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ரகம் பிரசித்தி பெற்றது. இதற்கு நல்ல விலை கிடைத்து வருவதால் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறையின் பழப்பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இயற்கை வேளாண்மை எனும் செலவு குறைந்த உத்தி மூலம் நீண்டகால, நிரந்தர வருமானத்திற்கு வழிவகுக்கும். இதில் பலவித உத்திகள் உள்ளதால் நல்ல மகசூல் மட்டுமல்ல, தரம் மேம்படுவதால் கூடுதல் வரவையும் பலமடங்கு அதிகரிக்கலாம்.
இயற்கை வேளாண்மையால் சுற்றுச்சூழல் பாதிக்காது. உடல் நலத்தைக் காப்பதோடு, வருங்கால சந்ததியினருக்கு புதுப்புது நோய்கள் வராமல் தடுக்கும்.
இயற்கை வேளாண்மைக்கு பயன்படும் இடுபொருட்களில் உறுதுணையாக உயிர் உரங்கள், மண்புழு உரம், பஞ்சகவ்யா, தசகவ்யா, மண்புழுக் குளியல் நீர், சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா, விரிடி, அசோலா, பசுந்தழை உரங்கள் பசுந்தாள் உரப்பயிர் பயன்பாடு, பயிர் கழிவுகள் உரமாக்குதல், கால்நடைக் கழிவுகள், கம்போஸ்ட் வகைகள் பயன்பாடு பலவித சாம்பல்கள், பலவித பிண்ணாக்கு மற்றும் இலைச்சாறுகள் உள்ளன. இவற்றை சரியான முறையில் பயன்படுத்தி நல்ல பலனை பெறலாம்.

இதைத்தவிர விவசாயிகளுக்கான உழவியல் உத்திகளாக பல பயிர் சாகுபடி, ஊடுபயிர் சாகுபடி, நிலப்போர்வை அமைத்தல் ஆகியவை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும். அவர்களுக்கு இந்த உத்திகள் சிறந்த முறையில் உதவும்.
பசுந்தாள் உரப்பயிர்களான சீமை அகத்தி, சணப்பை, தக்கைப்பூண்டு, பில்லிப்பயறு, கொழுஞ்சி, அவுரி முதலியவற்றை பயிர் சுழற்சியில் சேர்த்தல் நல்லது.
பசுந்தழைச் செடிகள், கிளரிசீடியா, ஆவாரை, ஆடாதோடா, எருக்கு மற்றும் மலைப்பூவரசு, பூவரசு மற்றும் புங்கம் மரங்களையும் பயன்படுத்தலாம்.
நம் தோட்டத்திற்கு தேவையான மண்புழு உரத்தினை ஆடு, மாடு, குதிரை மற்றும் செம்மறி ஆடு ஆகிய கால்நடைகளின் கழிவுகளைப் பயன்படுத்தியும் தயாரிக்கலாம். மேலும் கிடைக்கும் கழிவுகளை மீள்சுழற்சி செய்து பயன்படுத்துவது சிறந்த செலவில்லாத உத்தியாகும்.
தேனீ வளர்ப்பு, மீன் வளர்ப்பும் மற்றும் கோழி, வாத்து, காடை, வான்கோழி ஆகிய பறவைகளையும் வளர்க்க கூடுதல் வருவாயைத் தரும். எந்தப் பயிர் சாகுபடி செய்தாலும், எளிய முறையில் ஏற்ற ஊடுபயிர் மற்றும் இணைபயிரை தேர்வு செய்து பயிரிட்டால் கூடுதல் லாபம் பெறலாம்.

பாரம்பரிய உத்திகளில் விதை நேர்த்திக்கு புகையிலைச்சாறு பயன்பாடு, சாணிப்பால் பயன்பாடு, செம்மண் கலந்து விதைகளை முலாம் பூசுதல் ஆகிய முறைகளைக் கையாண்டு உரிய பருவத்தில் விதைக்க வேண்டும். பொறிப் பயிராக ஆமணக்கு, பொரியல் தட்டை சாகுபடி முதலியன பாரம்பரிய பழக்கமாக வழக்கில் உள்ளதால் தேவைப்படும் பகுதிகளில் பயன்படும் மா சாகுபடியில் மேற்கூறியுள்ள உத்திகளில் பலவற்றைக் கடைபிடித்தால் உயர் லாபம் பெறலாம்.
தகவல்;
முனைவர் இளங்கோவன்,
வேளாண் இணை இயக்குநர்,
காஞ்சிபுரம் மாவட்டம்.
செல்போன் 98420 07125