நாட்டு நடப்பு
Published:Updated:

ரேஷன் கடைகளில் பனை வெல்லம்... காலை சிற்றுண்டியில் பனை உணவு...

பனைத் திருவிழாவில்
பிரீமியம் ஸ்டோரி
News
பனைத் திருவிழாவில்

நாட்டு நடப்பு

பசுமை விகடன் மற்றும் கிரீன்நீடா சுற்றுச்சூழல் அமைப்பு இணைந்து நடத்திய பனை திருவிழா, கடந்த செப்டம்பர் 25-ம் தேதி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள ராஜேஷ்வரி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்குத் திருவாரூர் மாவட்ட கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.கே.ஜானகிராமன் தலைமை வகித்தார். கிரீன் நீடா தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு வரவேற்புரை நிகழ்த்தினார்.

பனைத் திருவிழாவில்
பனைத் திருவிழாவில்

இவ்விழாவினை தொடங்கி வைத்து உரையாற்றிய தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் ஏ.நாராயணன் “பனை தொழிலாளர் நல வாரியத்தில் தற்போது பத்தாயிரம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதை ஒரு லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்து, அதற்காகச் செயலாற்றி வருகிறோம். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களை ஒப்பிடும்போது, காவிரி டெல்டா மாவட்டங்களில் பனை வாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. அதிக எண்ணிக்கையில் பனை மரங்கள் வைத்திருப்பவர்கள் பனை வாரியத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கலைநிகழ்ச்சி
கலைநிகழ்ச்சி

பனை மரம் ஏறுபவர்களைப் பனையேறி என அழைப்பது இன்றைக்கும் வழக்கத்தில் இருப்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும். இப்படி அழைப்பது தங்களைச் சிறுமைப்படுத்தக்கூடியது என அவர்கள் தங்களுடைய வருத்தத்தை வெளிப்படுத்துகிறார்கள். பனை மரம் ஏறுபவர்களை இனி பனைத் தொழிலாளர்கள் என்றுதான் அழைக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

கலந்துகொண்டோர்
கலந்துகொண்டோர்

மேலும் அவர் பேசிய்போது ‘‘பசுமை விகடனால், தமிழ்நாடு முழுவதும் விவசாயம் செழித்தோங்கி, பசுமையாகக் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. தற்போது கிரீன் நீடா அமைப்பினரோடு இணைந்து நீடாமங்கலத்தில் முன்னெடுத்திருக்கும் இந்தப் பனைத் திருவிழாவின் விளைவாக, எதிர்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் பனை மரங்கள் காட்சி அளிக்கட்டும்’’ எனத் தெரிவித்தார்.

பனையோலைகளில் செய்யப்பட்ட ஏராளமான கைவினைப்பொருள்கள், பனை உணவுப்பொருள்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. பனை மரங்களின் சிறப்புகள் குறித்து, ஒரத்தநாடு கயல் கோபு நடத்திய நாட்டுப்புற இன்னிசை நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது. நீர்நிலைகளின் கரைகளில் நடுவதற்காக, 50,000 பனை விதைகள் சேகரிக்கப்பட்டு இவ்விழாவில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

பனைத் திருவிழாவில்
பனைத் திருவிழாவில்

இவ்விழாவில்... சாகித்ய அகடாமி விருதுப்பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன், பனை செயற்பாட்டளர் காட்சன் சாமுவேல், கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க தலைவர் செ.நல்லசாமி, திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, வேளாண் செயற்பாட்டாளர் வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார், தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறை தலைவர் காமராசு, நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சோம.செந்தமிழ்செல்வன், திருவாரூர் வேலுடையார் கல்வி குழுமங்களின் தலைவர் தியாகபாரி உள்ளிட்ட பலர் உரையாற்றினார்கள்.

பனைத் திருவிழாவில்
பனைத் திருவிழாவில்



பனை மரத்திலிருந்து கிடைக்கும் நுங்கு, பனம் பழம், பதநீர் உள்ளிட்ட இன்னும் பல்வேறு உணவுப்பொருள்கள், மக்களின் உடல் நலனுக்குப் பெரிதும் துணை செய்யக்கூடியவை. பனை ஓலை பொருள்களில் செய்யப்படுகின்ற தோடு, வளையல், செயின் போன்றவைகளை நவநாகரீக பெண்களும் கூட விரும்பி அணிய தொடங்கியிருக்கிறார்கள். சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு தீங்கும் செய்யாத பனையோலை பொருள்களை மக்கள் அதிகமாகப் பயன்படுத்தினால், பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைப் பெருமளவு குறைக்கலாம். பனை மரங்களும் பாதுகாக்கப்படும் இவ்விழாவில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

பனைப்பொருள்கள் விற்பனை
பனைப்பொருள்கள் விற்பனை

தமிழக அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் பனை விதைகள் நடப்பட வேண்டும். பனை ஓலை பொருள்கள் தயாரிப்புப் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட வேண்டும். பனை வெல்லம் அனைத்து ரேசன் கடைகளிலும் விற்பனை செய்யப்பட வேண்டும். தமிழக அரசின் ஆவின் பாலகத்தில் தயாரிக்கப்படும் இனிப்புப் பண்டங்களைப் பனை வெல்லத்தில் செய்து வழங்க முன்வர வேண்டும். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவில் பனை பொருள்கள் சேர்க்கப்பட வேண்டும்.

தமிழக அரசின் சார்பில் அரசுப்பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டியில் பனை உணவுப்பொருள்களைச் சேர்க்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள சுய உதவிக்குழுப் பெண்களுக்குப் பனை ஓலைப் பொருள்கள் தயாரிப்புப் பயிற்சி அளிக்க வேண்டும். அதன் மூலம் தயாரிக்கப்படும் பனை ஓலை பொருள்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் இவ்விழாவில் வலியுறுத்தப்பட்டது.