தமிழகம் மற்றும் கேரளா இடையே உள்ள முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இதில், `முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளது. அதற்குப் பதிலாக புதிய அணை கட்டிய பிறகு, பழைய அணையை அகற்ற வேண்டும். முல்லை பெரியாறு வழக்கு தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவது குறித்த வழக்கு அல்ல. அணையின் பாதுகாப்பு குறித்த வழக்குதான். தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை' என கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாதம் தமிழக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இரண்டு நாள்களில் தமிழக முதல்வர் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உரிய முடிவெடுக்க வில்லை என்றால் விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளோம் என ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது குறித்து ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``1979-ம் ஆண்டு ஆரம்பித்த முல்லை பெரியாறு அணை பிரச்னை 40 ஆண்டுகளாக நீடித்துக்கொண்டிருக்கிறது. மொத்தமாக 10 டி.எம்.சி கூட இல்லாத பெரியாறு தண்ணீருக்காக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 10 லட்சம் விவசாயிகள் ஆண்டுதோறும், கண்ணீருடன் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
உச்ச நீதிமன்றம் 2006 மற்றும் 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளில் தெளிவான தீர்ப்பைக் கொடுத்தும்கூட பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியவில்லை. முல்லை பெரியாறு அணை பிரச்னையை, முழுக்க முழுக்க அரசியலாக்கிய கேரள அரசியல்வாதிகளின் அடாவடிகளால், தெளிவான தீர்ப்பை நோக்கி நகர்வதற்கு நம்மால் முடியவில்லை. உச்ச நீதிமன்றம் பேபி அணையைப் பலப்படுத்திவிட்டு, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்று தெளிவுபடுத்திவிட்ட பின்னரும், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாகப் புதிய அணைக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதுதான் கொடுமையின் உச்சம்.

அப்படியானால், உச்ச நீதிமன்றத்துக்குக் கட்டுப்பட்டது சுற்றுச்சூழல் அமைச்சகமா அல்லது சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்குக் கட்டுப்பட்டது உச்ச நீதிமன்றமா என்ற அடுத்த கேள்வி எழுகிறது. ஜனநாயகத்தைப் பேணிக்காக்கும் உச்சபட்ச நடவடிக்கையில் தமிழகம் பொறுமை காத்து நிற்க, ஜனநாயகத்தை அப்பட்டமாக மீறும் எதேச்சதிகார நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது கேரளா என்பதை நாடு அறியாமல் இல்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உச்ச நீதிமன்றம் தன்னுடைய உச்சபட்ச அதிகாரத்தை நிலைநாட்டாமல் பாராமுகமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சட்டப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறது தமிழகம். ஆனால், போகிற போக்கில் கேரளத்தைச் சேர்ந்த ஒருவரால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படக்கூடிய ஒரு மனுவுக்காக இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது என்பது ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட இழுக்காகவே உள்ளது.

கேரள மக்களின் பாதுகாப்பு என்கிற அறிவிலித்தனமான காட்டுக்கூச்சல்களை முப்பதாண்டுகள் எழுப்பியதன் விளைவு, ஐந்து மாவட்டங்களில் வாழும் 90 லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது. சிவகங்கை மாவட்டத்திலும் ராமநாதபுரம் மாவட்டத்திலும் பெரியாறு பாசன கண்மாய்களில் வேலிக்கருவை மண்டிக் கிடக்கும் அவலநிலை கடந்த 25 ஆண்டுகளாக நீடித்துக்கொண்டிருக்கிறது.
முல்லை பெரியாறுதான் எங்களுடைய ஜீவனம். தமிழக அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகளுக்காக ஐந்து மாவட்ட விவசாய சங்கம் காத்திருக்கிறது. நடவடிக்கை தாமதமாகும் பட்சத்தில் நேரடியாகக் களத்தில் இறங்குவோம். இரண்டொரு நாள்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விஷயத்தில் தக்க நடவடிக்கை எடுக்க தாமதிக்கும் பட்சத்தில், காலவரையற்ற உண்ணாவிரதத்தை ஐந்து மாவட்ட விவசாய சங்கம் முன்னெடுக்கும்'' எனத் தெரிவித்துள்ளார்.