சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டிகள், அதிகமாகப் பயன்பாட்டில் இருந்தது. `பூவோட சேர்ந்த நாறும் மணக்கும்’ எனச் சொல்வதைப் போல பனையோலைப் பெட்டிக்குள் வைக்கும் திண்பண்டமும் தனி மணத்துடன் இருக்கும். திருவிழா நேரங்களில் இனிப்பு மிட்டாய், சீனி மிட்டாய், கருப்பட்டி மிட்டாய், இனிப்புச் சேவு என இனிப்பான திண்பண்டங்களை ஓலைப் பெட்டிக்குள் வைத்து உறவினர்கள் வீடுகளுக்கு வாங்கிக்கொண்டுபோய் கொடுப்பார்கள்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
திண்பண்டங்கள் சாப்பிட்டுத் தீர்ந்த பிறகு அதே பெட்டிகளுக்குள் கருப்பட்டியை வைத்து பாதுகாத்து பயன்படுத்துவார்கள். இதனால், பனையோலைப் பெட்டிகளே இல்லாத மிட்டாய்க் கடைகளைப் பார்க்க முடியாது. மரச் செப்பு விளையாட்டுச் சாமான்களையும் இந்தப் பெட்டிகளிலேயே அடைத்துக் கொடுப்பார்கள். இறைச்சிக் கடைகளில்கூட பனையோலைப் பெட்டி பயன்பாட்டில் இருந்தது. மக்களும் இதைப் பரவலாகப் பயன்படுத்த ஆரம்பித்ததால், பனையோலை உற்பத்தி தொழிலும் பரவலாக நடந்தது.
நாளடைவில் அட்டைப்பெட்டிகள், பிளாஸ்டிக் பைகளின் வரவால் பனையோலைப் பெட்டிகளின் பயன்பாடு குறைந்ததுடன், அத்தொழிலும் நலிவடைந்துவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் உடன்குடி, திருச்செந்தூர், நாகலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பனையோலைப் பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பனையோலைப் பெட்டிகளை உற்பத்தி செய்து வந்தன.

இந்த நிலையில், தற்போது 200-க்கும் குறைவான குடும்பங்களே உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள். கொரோனா ஊரடங்கால் ஆங்காங்கே பெயரளவுக்கு நடந்து வந்த உற்பத்தியும் தற்போது முடங்கிப் போனது. தற்போதைய தமிழக அரசு, மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் பனையோலைப் பெட்டிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறார்கள் பனையோலைப் பெட்டி உற்பத்தியாளர்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதுகுறித்து நாகலாபுரத்தைச் சேர்ந்த பனையோலை உற்பத்தியாளர்களிடம் பேசினோம். ``பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் விதமாக மீண்டும் மஞ்சள் பைகளைப் பயன்படுத்திட வேண்டும் எனத் தமிழக அரசு தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருவது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் பேக்கரி கடைகள், இறைச்சிக் கடைகளில் பிளாஸ்டிக்கை தவிர்த்து பனையோலைக் கொட்டான்களை பயன்படுத்திடவும் அரசு வலியுறுத்த வேண்டும்.

இதனால், பனையோலை கொட்டான்கள் உற்பத்தி அதிகரிப்பதுடன், உற்பத்தியாளர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். சிறுதொழில்களுக்கு அரசு கடன் வழங்குவதைப் போல, எங்களுக்கும் அரசு மானிய விலையில் சிறுகடன் வழங்கிட வேண்டும். மக்கள் விரும்பினால், பல வகையான கலர் கலர் கொட்டான்களையும் உற்பத்தி செய்ய முடியும்” என்றனர்.