நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் 'பறவைகள் சரணாலயம்' உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தச் சரணாலயத்திற்குப் பல்வேறு நாடுகளிலிருந்து சுமார் 250 வகையான பறவைகள் வந்து சில மாதங்கள் தங்கிச்செல்வது வழக்கம். இதில் 50 வகையான நிலப்பறவைகளும், 200-க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகளும் வருகின்றன. சைபீரியா, ஈரான், ஈராக் நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் வருகின்ற நான்கு அடி உயரமுள்ள பூநாரைகள்தான் (பிளமிங்கோ) கோடியக்கரைப் பறவைகள் சரணாலயத்தின் தனிச் சிறப்பாகும்.

மேலும், கொசு உள்ளான், கூழைக்கிடா, லடாக்கிலிருந்து வரும் சிவப்புக் கால் உள்ளான், ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் வரித்தலை வாத்து, உள்நாட்டுப் பறவைகளான செங்கால்நாரை, ரஷ்யாவிலிருந்து வரும் சிறவி வகைகள், இலங்கையிலிருந்து வரும் கடல்காகம், ஆர்க்டிக் பிரதேசத்திலிருந்து வருகை தரும் ஆர்க்டிக்டேன் (ஆலா), இமாசலப்பிரதேசத்திலிருந்து வரும் இன்டியன் பிட்டா (காச்சலாத்தி) உள்ளான் வகைப் பறவைகள் வருகை தந்துள்ளன.
இவ்வாண்டு சரணாலயத்திற்கு இமாசலப்பிரதேசத்திலிருந்து 58 ஆண்டுகளுக்குப் பிறகு ’ஹிமாலய கிரிபன் கழுகு’ மற்றும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வரித்தலை வாத்தும் வந்துள்ளன. புதிய வரவாக வடகிழக்கு ரஷ்யாவிலிருந்து 22,000 கி.மீ. தொலைவைக் கடந்து குயில் வடிவில் காணப்படும் அமூர் பால்கன் பறவை வந்துள்ளது.
இங்கு சில மாதங்கள் தங்கி ஓய்வு எடுக்கும் இந்தப் பறவைகள் மத்திய இந்தியப் பகுதிவரை சென்று, பின்னர் தென்னாப்பிரிக்கா செல்வது வழக்கம்.

சென்ற ஆண்டு பறவைகள் சுமார் ஒரு லட்சம் பறவைகளுக்குமேல் வந்தன. தற்போது பறவைகள் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலை நிலவுவதால், இவ்வாண்டு அக்டோபர் மாதத் தொடக்கத்திலேயே இதுவரை ஒரு லட்சத்திற்குமேல் பறவைகள் வந்து குவிந்துள்ளன. இதுகுறித்து கோடியக்கரை வனச்சரகர் அயூப்கானிடம் பேசியபோது,
"கோடியக்கரை பறவைகள் சரணலாயத்திற்குச் சுற்றுலாப் பயணிகள், காலை, மாலை வேளைகளில், பறவைகளை கோடியக்கரை முனியப்பன் ஏரி, பம்ப் ஹவுஸ், கடற்கரைப் பகுதி உள்ளிட்ட இடங்களில் காணலாம். சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டி, பைனாக்குலர், தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன" என்றார்.