தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது, இந்திய வானிலை ஆய்வு மையம். அதில் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்று அறிவித்துள்ளது.
இன்று தென் தமிழக மாவட்டங்களின் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 27-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 28, 29 ஆகிய தினங்களில், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.