பொது சேமநல நிதியில் (பி.பி.எஃப்) தனி நபர் ஒருவர் தற்போது தனது பெயரில் ஒரே ஒரு கணக்கு மட்டுமே வைத்திருக்க வேண்டும். ஆனால் ஒரு சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட சேமநல நிதி கணக்கு வைத்துள்ளனர். அவ்வாறு வைக்கப்பட்டிருந்தால் அந்தக் கணக்குகளை ஒன்று சேர்த்து ஒரு கணக்காக உடனடியாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஓய்வுக் கால சேமிப்புகளில் சேமநல நிதி மிக முக்கிய பங்காற்றுகிறது. தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொழிலாளர் சேமநல நிதியில் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்பட்டு ஓய்வுக் காலத்திற்காக சேமிக்கப்படுகிறது.

ஆனால் அவ்வாறு மாதாந்தர வேலைகளில் இல்லாத மக்கள் ஓய்வு காலத்திற்கு சேமிக்க வேண்டும் என்பதற்காக பொது சேமநல நிதி அறிமுகம் செய்யப்பட்டது. வங்கி டெபாசிட்டை விட அதிகமாக, 7.1% வரை வட்டி, ஆண்டிற்கு குறைந்தபட்சம் 500 ரூபாயில் இருந்து சேமிப்பை தொடங்குவது எனப் பல காரணங்களால் ஓய்வு காலத்திற்கு பெரும்பாலான மக்கள் சேமிக்கும் திட்டமாக பொது சேமநல நிதி உள்ளது.
இதில் திரட்டப்படும் நிதிக்கு ஆண்டுதோறும் 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரித் தள்ளுபடி கிடைப்பது இதன் கூடுதல் அம்சம் ஆகும்.
பொது சேமநல நிதியை சுலபமாக வங்கிகளில் அல்லது தபால் நிலையங்களில் ஆரம்பிக்க முடியும். அதனால் ஒரு சிலர் தனது பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை வெவ்வேறு இடங்களில் தொடங்கி சேமித்து வருகின்றனர். அதனால் பொது சேமநல நிதியை முறைப் படுத்துவதற்காக மத்திய அரசு இந்த விதிமுறையை கொண்டு வந்துள்ளது.
இந்த விதியின்படி முதலீட்டாளர்கள் தங்களது ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை ஒன்றாக இணைக்கவேண்டும். அப்படி அனைத்தையும் ஒரே கணக்குக்கு மாற்றிக் கொள்ளும்போது மூடப்படும் கணக்கில் உள்ள சேமிப்பில் சேர்ந்துள்ள வட்டி கணக்கிடப்பட்டு, அது முழுவதும் மற்றொரு கணக்கிற்கு மாற்றம் செய்யப்படும். அவ்வாறு கணக்கை மூடும்போது அந்தக் கணக்கில் கடன் ஏதும் பெற்றிருந்தால் அந்தக் கடன் தொகையை முழுவதாக கட்டி முடித்த பிறகுதான் கணக்கை மாற்ற முடியும்.

பொது சேமநல நிதியில் ஆண்டிற்கு அதிகபட்சமாக ஒருவர் பெயரில் 1.5 லட்சம் ரூபாய் மட்டுமே வைப்பு நிதியாக சேமிக்க முடியும். இரண்டு கணக்குகளில் சேர்த்து ரூ. 1.5 லட்சத்திற்கும் மேல் சேமித்திருந்தால் அதிகமாக சேமித்த தொகை வட்டி இல்லாமல் முதலீட்டாளரிடம் திரும்ப வழங்கப்படும். வீட்டில் உள்ள மைனர் சிறுவர் அல்லது சிறுமியர் பெயரில் கணக்குகள் இருந்தால் அந்தக் கணக்குகள் தனிக் கணக்குகளாக ஏற்றுக்கொள்ளப்படும்.
அதனால், உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட பொது சேமநல நிதி கணக்குகள் இருந்தால் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்து இணைக்கப்பட வேண்டும்.