ஸ்பெஷல் -1
Published:Updated:

வாலி 80 ஆயிரத்தில் ஒருவன்!

வாலி 80 ஆயிரத்தில் ஒருவன்!

வாலி 80 ஆயிரத்தில் ஒருவன்!
வாலி 80 ஆயிரத்தில் ஒருவன்!
வாலி 80 ஆயிரத்தில் ஒருவன்!
பாரதி தம்பி
படங்கள்:கே.ராஜசேகரன்
வாலி 80 ஆயிரத்தில் ஒருவன்!

லைமுறை கடந்தும் தடதடக்கும் தமிழ்க் கவிஞன்!

வருடங்களுக்கு வயதானாலும் வாலி யின் வரிகளில் எப்போதும் நிரம்பி வழிகி றது இளமையின் குளிர்ச்சி. தமிழ்த் திரை இசையில் 50 வருடங்களைத் தாண்டியும் பாண்டியாட்டம் ஆடும் வாலிக்கு 80 வயது. அவரது பிறந்த நாள் விழா மிகப் பிரமாண்டமாக விரைவில் நடக்கவிருக் கிறது. அதற்கு ஒரு முன்னோட்டமாக, இளம் தலைமுறை திரை இசைக் கவிஞர் கள் 12 பேர், வாலியுடன் நிகழ்த்திய அழகிய சந்திப்பு அது!

ஒரு ஞாயிற்றுக் கிழமை... மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவில் தமிழ் சினிமாவின் முன்னணிக் கவிஞர்களான பழநிபாரதி, நா.முத்துக்குமார், யுகபாரதி, கபிலன், பா.விஜய், சினேகன், விவேகா, தாமரை, கிருதயா, நந்தலாலா, இளைய கம்பன், நெல்லை ஜெயந்தா என 12 பேரும் ஆஜர்!

உற்சாகம் கரைபுரள வந்தார் வாலி. "என்னய்யா... இந்தக் கிழவனை மதிச்சு இத்தனை பேர் வந்திருக்கீங்களா?" என்று அவர் கலகலக்க... துவங்கியது தித்திப்புச் சந்திப்பு. "நவம்பர் 13 என் பிறந்த நாள் விழா நடக்குது. நான் எழுதின சினிமா பாட்டு கலெக்ஷன் வெளியிடுறேன். கமல் வெளியிட, ஷங்கர் வாங்கிக்குறார். சரோஜாதேவி, பாலசந்தர் எல்லோரும் வர்றாங்க. எதுக்கு இதைச் சொல்றேன்னா, அது எல்லாத்தையும்விட நான் பெருசா நினைக்கிறது, இன்னிக்கு இத்தனை கவிஞர்கள் இங்கே வந்திருப்பதைத்தான். இவங்க அத்தனை பேரும் இன்னிக்கு லைம் லைட்டில் இருக்குற கவிஞர்கள். ஒவ்வொருத்தருக்கும் ஆயிரத்தெட்டு வேலை இருக்கும். அதை எல்லாம் விட்டுட்டு இந்தக் கிழவனுக்காக வந்திருக்காங்கன்னா, அது என் பாக்கியம். இதுதான் நான் வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தம்!" என்று நெகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார் வாலி.

"அப்படில்லாம் சொல்லக் கூடாது. எங்க ஆசான் நீங்க. உங்களைப் பார்த்துத்தான் திரைப்பாடல் நுணுக் கங்களை நாங்க கத்துட்டு இருக்கோம்!" என்று புன்னகைத்த தாமரையின் வார்த்தைகளுக்கு எல்லோரும் தலை அசைத்தனர். நெல்லை ஜெயந்தாவும் பழநிபாரதியும் இணைந்துதான் வாலியின் பாடல்களைத் தொகுத்துக்கொண்டு இருக்கின்றனர்.

வாலி 80 ஆயிரத்தில் ஒருவன்!

புகைப்படம் எடுப்பதற்காக வாலியின் இருபுறமும் யுகபாரதியும், இளையகம்பனும் அமர, "இந்தப் பக்கம் கம்பன், இந்தப் பக்கம் பாரதி. இதைவிட வேற என்னய்யா வேணும்!" என வாலி அடித்தார் டைமிங் கமென்ட்.

"எனக்கு எப்போதும் ஆச்சர்யமா இருப்பது வாலி சாரின் சிலேடை. அப்புறம் தயக்கமே இல்லாமல் இளம் கவிஞர் களை அழைத்துப் பாராட்டுவார். 'அன்னக் கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க, நெல்லுக்குப் பதிலாக முத்தங்கள் நான் கொடுக்க' என்று நான் எழுதிய பல்லவிக்கு, அவர் அழைத்துப் பாராட்டியதை என்னால் மறக்கவே முடியாது. தமிழ்த் திரை இசைப் பாடல்களின் மூத்த குடிமகன் வாலி!" என்ற பழநிபாரதியின் சொற்களில் உண்மை.

" 'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா' பாட்டுக்கு எதுக்கு நீ மன்னிப்பு கேக்கணும்? அதுல என்ன தப்பு? கிராமத்துல லவ்வர்ஸ் இருக்காங்க. கல்யாணத்துக்கு யாரும் சம்மதிக்கலை. 'இங்கேயே கோயில்ல கல்யாணம் பண்ணிக்கலாமா, இல்லை, வேற ஊருக்கு ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாமா?'ன்னு கேக்குறது என்ன தப்பு? ஓடிப் போயி குழந்தை பெத்துக்க லாமான்னு கேக்கலையே!" என்று சினேகனிடம் கேட்கும் போது, வாலியின் தாடிக்குள் குறும்புச் சிரிப்பு.

தாமரை, வாலியிடம் சொன்ன ஃப்ளாஷ்பேக் ரொம்பவே சுவாரஸ்யம். "நீங்க எழுதிய 'உன்னை நான் சந்தித்தேன், நீ ஆயிரத்தில் ஒருவன்' பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். என் கணவர் தியாகுவிடம் அப்போ என் விருப்பத்தை எப்படிச் சொல்றதுன்னு புரியாம இருந்த சமயத்தில், ஒரு கேசட் வாங்கி, ரெண்டு பக்கமும் இந்தப் பாட்டை மட்டும் திரும்பத் திரும்பப் பதிஞ்சு 'இதைக் கேளுங்க'ன்னு கொடுத் தேன். என் காதலுக்கு உங்க பாடல்தான் தூது!" என்றதும் ஆச்சர்ய பூரிப்பு வாலிபக் கவிஞர் முகத்தில்!

"இசைக்கு ஏற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துறதுல இன்னிக்கும் வாலி சார்தான் கில்லி. 'தாமரைக் கன்னங்கள்' பாடலில் 'மாலையில் சந்தித்தேன், மையலில் சிந்தித்தேன், மங்கை நான் கன்னித் தேன், காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்' என்ற பாட்டு எப்பவும் நான் முணுமுணுக்குற பாட்டு. அவரைப் பார்த்து, வளர்ந்து, இன்னிக்கு அவர்கூட நிற்கிறோம் என்பதே பெருமைதான்!" என்று பூரிப்புடன் பேசுகிறார் விவேகா.

வாலி 80 ஆயிரத்தில் ஒருவன்!

"ஹீரோ ஆனதும் உடம்பு இளைச்சு வேற மாதிரி ஆயிட்டான் பாருங்க!" என்று பா.விஜய்யைப் பார்த்து வாலி சொல்ல, வெட்கப் புன்னகை சிந்தினார் விஜய்.

"அப்படிப் புல்லில் உட்கார்ந்து ஒரு போட்டோ எடுப்போம், வாங்க" என்று கவிஞர் நந்தலாலா அழைக்க, "கவிஞன்னாலே ஃபுல்லுலதானே இருக்கணும்!" என்று மீண்டும் மீண்டும் கலகலக்க வைத்துக்கொண்டே இருந்தார் வாலி.

"எம்.ஜி.ஆர். காலத்தில் 'ஒரு கல், ஒரு கண்ணாடி'ன்னு நீ எழுதி இருந்தா, உனக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுத்திருப்பாருய்யா!" என்று நா.முத்துக்குமாரைப் பார்த்துச் சொன்ன வாலி, "உங்க எல்லாருக்கும் நான் கடமைப்பட்டு இருக்கேன். எல்லாரும் இன்னும் நல்லா ஜெயிச்சு வாங்க. உலகம் ஒண்ணும், 'நீங்க முன்னுக்கு வரணும்'னு கவலைப்பட்டு ராஜபாட்டை போட்டு வரவேற்காது. வரிக்கு வரி தடங்கல் வரத்தான் செய்யும். 'இந்தப் பக்கம் கண்ணதாசன், அந்தப் பக்கம் பட்டுக்கோட்டை... இதுக்கு இடையில நாமெல்லாம் எங்கே?'னு நினைச்சவன்லாம் ஓடிட்டான். நான் ஒருத்தன்தான் 'அவங்களுக்குத் தெரிஞ்சதை அவங்க எழுதட்டும். நமக்குத் தெரிஞ்சதை நாம எழுதுவோம்'னு நின்னேன். அவனவனுக்குத் தெரிஞ்சதை அவனவன் பண்ணா எல்லாமே நல்லா இருக்கும்!" என்ற வாலியின் பேச்சு முழுக்க தன்னம்பிக்கையின் தமிழ் ஊற்று!

வாலி 80 ஆயிரத்தில் ஒருவன்!
வாலி 80 ஆயிரத்தில் ஒருவன்!