'எங்கோ தண்டகாரண்யா காட்டில் நடக்கிற யுத்தம்தானே, நமக்கென்ன?' என நீங்கள் நினைத் தால், உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். இந்தப் போர் நாளை மறுநாளோடு முடியப் போவது இல்லை. இது வருடக்கணக்கில் தொடரப் போகும் யுத்தம். இந்தப் போர் விழுங்கப் போகும் தீனி, நாட்டின் பொருளாதாரத்தையே உறிஞ்சி ஊனமாக்கும். அது உங்களையும் மோசமாகத் தாக்கும்!"
"இலங்கையில் தமிழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். அதைத் தடுக்கக் கோரி, தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார்கள். ஆனாலும், எதையும் தடுக்க முடியவில்லையே?"
"உங்கள் உயிரை மாய்த்துக்கொள்வதால் அர சாங்கம் வெட்கப்பட்டு பிரச்னையைச் சரி செய்துவிடும் என்று எதிர்பார்க்காதீர்கள். இந்திய அரசுக்கு வெட்கம் எல்லாம் கிடையாது.இது தற்கொலைகளை விரும்புகிறது. தற்கொலைப் படைகளை வெறுக்கிறது. தமிழர்கள் மட்டுமல்ல; நாடு முழுவதும் விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என எத்தனையோ வகையினர் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் கொடுமை யால் தற்கொலை செய்துகொள்கின்றனர். எதிர்ப் பவர்களை ராணுவம், போலீஸ், சல்வா ஜூடும் என கூலிப் படைகளைவைத்துக் கொல்வதற்கே தயங்காத அரசு, அவர்கள் தானாகவே முன்வந்து தற்கொலை செய்துகொண்டால் மகிழ்ச்சி அடையத்தானே செய்யும்!"
"ஈழப் போரில் தமிழர்கள் அழிக்கப்படுவதுபற்றியும், அது ஓர் இன அழிப்பு என்பதையும் நீங்கள் எழுதினீர்கள். ஆனால், போர் நடந்தபோது அறிவுத் துறையினர் பலர் மௌனமாகவே இருந்தார்கள். ஈழப் போர், பசுமை வேட்டை போன்ற மக்களுக்கு எதிரான அரச நடவடிக்கைகளின்போது, எழுத்தாளர்கள், கலைஞர்களின் குறிப்பான பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும்?"
"எழுத்தாளர்களும், கலைஞர்களும் புரட்சிகர டி.என்.ஏ-ல் இருந்து வரவில்லை. இந்தச் சமூகத்தின் எல்லா வகை மாதிரிகளையும் அவர்களிடமும் காணலாம். நாட்டின் மிகப் பெரிய அறிவுஜீவிகள் என்று நீங்கள் நம்பும் பலர் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள். இவர்களுக்காக வருடத்துக்குப் பல நூறு கோடி ரூபாய்களை நிறுவனங்கள் செலவழிக்கின்றன. அவர்களிடம் இருந்து எப்படி மக்கள் ஆதரவு எழுத்துக்களை எதிர்பார்க்க முடியும்?
உண்மையில், இலங்கையின் இன அழிப்பைத் தடுத்து நிறுத்தக்கூடிய செல்வாக்குப் பெற்றிருந்தவர்கள் தமிழக அரசியல் கட்சிகள்தான். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. போராட்டங்களை ஒரு சடங்கு ஆக மட்டும் நிறுத்திக்கொண்டுவிட்டனர். இப்போதைய பசுமை வேட்டை நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பும் அரசியல் கட்சிகளுக்குத்தான் இருக்கிறது. ஆனால், இதையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். ஏனெனில், நம் நாட்டில் காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க. போன்றவை புறத்தோற்றத்தில் மட்டுமே அந்தப் பெயருடன் உள்ளன. உண்மையில் அவை, டாடா கட்சி, அம்பானி கட்சி, மிட்டல் கட்சியாகத்தான் செயல்படுகின்றன!"
"மாவோயிஸ்ட்டு வேட்டைக்கு விமானங்களைப் பயன்படுத்தவேண்டும் என்று சி.பி.எம். சேர்ந்த சீதாராம் யெச்சூரி சொல்கிறார். கம்யூ னிஸ்ட்டுகளின் இந்தக் கருத்தைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"
"(சிரிக்கிறார்) அவர்கள் டாடாவிடமும், அம்பானி யிடமும் சரணடைந்த பிறகு, பாட்டாளிகளுக்கான கட்சி என்ற தகுதியை எப்போதோ இழந்துவிட்டனர். அதன் வெளிப்பாடுதான் பழங்குடி மக்கள் மீது விமானங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்வதும். உடனே, 'மாவோயிஸ்ட்டுகள் வேறு, பழங்குடிகள் வேறு' என்று யாரேனும் இலக்கணம் சொல்வார்களானால், அவர் களுக்கு நான் சொல்கிறேன், 99 சதவிகிதப் பழங்குடிகள், மாவோயிஸ்ட்டுகள் அல்ல; ஆனால், 99 சதவிகித மாவோயிஸ்ட்டுகள்... பழங்குடிகளே!"
" 'ஆமாம், நான் ஒரு மாவோயிஸ்ட்டுதான்' என நீங்கள் பேசியதாகச் செய்தி வந்ததே?"
|