அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம்...
"நாகராஜ் என்ற மாணவர் ப்ளஸ் டூ-வில் 1,152 மதிப்பெண்களும், மருத்துவ கட் ஆஃப் 197.75-ம் பெற்றிருக்கிறார். ஆனால், இலங்கைத் தமிழர் என்பதால் அவரது பெயர் தரவரிசைப் பட்டியலில் இடம்பெறவில்லையாமே?"
" 'இன்ஜினீயரிங், மருத்துவ கவுன்சிலிங்கில் இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்' என்கிறது விதி. வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்ள முடியாது!"
பழ.நெடுமாறனிடம்...
"இலங்கையில் சாலை மற்றும் ரயில்வே பணிகளை மேற்கொள்ள 25 ஆயிரம் சீனக் கைதிகள் வந்திருப்பதாக ஜெயலலிதா கூறியது உண்மையா?"
"ஆமாம். இலங்கையில் வேறு எந்த அந்நிய நாட்டையும் கால் பதிக்க இந்தியா இதுவரை விட்டது இல்லை. ஆனால், இன்று சாலைப் பணியாளர்கள் என்ற பெயரில் சீன ராணுவத்தினர், உளவாளிகள் உள்ளே புகுந்துவிட்டனர். இது இந்தியாவின் பாதுகாப்புக்குப் பெரிய கேடு!"
தங்கபாலுவிடம்...
"நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏற்கெனவே கூறி உள்ளதாகச் சொல்கிறீர்கள். இத்தனை நாட்களாகக் கோரிக்கையைக் கிடப்பில் போட்டது, ஏன்?"
"அவ்வப்போது மத்திய - மாநில அரசுகளுக்கு நினைவூட்டியே வந்திருக்கிறோம். தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்களுக்கு ஆதரவு தெரிவித்தேன். நீதிமன்றங்களில் தமிழ் வழக்குமொழியாக ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை!"
சீமானிடம்...
"சூர்யாவிடம் நீங்கள் கால்ஷீட் கேட்டுள்ளதால்தான், அவருடன் விவேக் ஓபராய் நடித்துள்ள 'ரத்த சரித்ரா' படத்தைத் தமிழகத்தில் தடை செய்வதுபற்றிப் பேச மறுப்பதாகக் கூறுகிறார்களே?"
"சூர்யாவிடம் நான் கால்ஷீட் கேட்கவும் இல்லை. அவர் என் படத்தில் நடிக்கவும் இல்லை. 'ரத்த சரித்ரா' படம் ஐஃபா விழா தொடங்குவதற்கு முன்பு எடுக்கப்பட்டது. என்னைப் போலவே சூர்யாவும் தமிழ் உணர்வாளர். ஐஃபா விழாவுக்குப் பிறகு விவேக் ஓபராயுடன் சூர்யா நடித்திருந்தால், அது தவறு. அதைப்போன்ற ஒரு தவறை சூர்யா செய்ய மாட்டார்!"
அசினிடம்...
"சல்மான்கானுடன் நடிக்கும் இந்திப் படப்பிடிப்புக்காக இலங்கை செல்கிறீர்களா?"
"தமிழ் உணர்வாளர்களையும், தமிழ்த் திரை உலகையும் மதிக்கிறேன். இந்திப் படப்பிடிப்புக்காக இலங்கை செல்வதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை!"
|