
என நினைக்காமல் கொஞ்சம் அக்கறையோடு ரிசர்ச் செய்திருந்தால் ‘சக்ரா’ குறைந்தபட்சம் ஒருமுறையாவது ஈர்த்திருக்கும்.
கதைக்காக மெனக்கெடாமல் மொத்த பாரத்தையும் ‘ஹேக்கிங்’ மேல் போட்டுவிட்டு கடமை முடிந்தது என ஒதுங்கிவிடும் மற்றுமொரு தமிழ்ப்படம் இந்த ‘சக்ரா.’
சென்னையில் சுதந்திர தினத்தன்று அடுத்தடுத்து 50 இடங்களில் கொள்ளை நடக்கிறது. அதில் ராணுவ அதிகாரி விஷாலின் வீடும் ஒன்று. அவர் தன் குடும்பச் சொத்தாகக் கருதும் மத்திய அரசின் பதக்கம் கொள்ளையடிக்கப்பட, வெகுண்டெழுந்து அதற்குக் காரணமானவர்களைத் தேடி ஓடுகிறார். அவர்களைக் கண்டுபிடித்த பின்னரும், ‘இருங்க, இன்னும் கொஞ்சநேரம் பேசிட்டு இருப்போம்’ என இரண்டாம் பாதி முழுக்க இழுப்பதே மீதிக்கதை.

விஷாலுக்கு இந்த மாதிரியான படங்களோ கதாபாத்திரங்களோ புதிதில்லை என்பதால் வந்து தன் வேலையைச் செய்துவிட்டு ஒதுங்கிவிடுகிறார். மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடம் என எதிர்பார்த்தால், தமிழ் சினிமா கொஞ்ச நாள்களாய் மறந்துபோயிருந்த ‘ஹீரோ வந்து காப்பாத்துவாரு’ ரக ரோல் ஷ்ரதா ஸ்ரீநாத்துக்கு. பில்டப் ஓப்பனிங்கோடு களமிறங்கும் ரெஜினாவும், கதையின் தள்ளாட்டத்தில் காணாமல்போகிறார். காமெடிக்கு எனப் படத்திலிருக்கும் ரோபோ ஷங்கரின் ஒன்லைனர்கள் பொறுமையை சோதிக்கின்றன.
தீம் மியூசிக்கில் வழக்கமாய் மிரட்டும் யுவன், இந்தப் படத்தில் நிறையவே ஏமாற்றுகிறார். ‘சக்ரா’வை ஓரளவிற்காவது கரையேற்றுவது பாலசுப்ரமணியெமின் ஒளிப்பதிவும் அனல் அரசின் ஸ்டன்ட் காட்சிகளும் மட்டும்தான்.
ஹேக்கிங்கை ஊறுகாய்போலத் தொட்டுக்கொண்ட காலம் போய், அதை மையமாக வைத்தே முழுநீளப் படங்கள் வரத் தொடங்கிவிட்டதெல்லாம் சரிதான். ஆனால், ஹேக்கிங் என்பதே மிகப்பெரிய குற்றம் என அரைகுறைப் புரிதலோடு அதை அணுகுவதில் இருக்கும் ஆபத்தை இயக்குநர் உணர முற்படவே இல்லை.

திரைக்கதையில் ஒன்றிரண்டு இடங்கள் சுவாரசியமாக இருக்கின்றன. அவை தவிர்த்து ஹீரோவுக்கு ஒவ்வொரு முறையும் சிக்கல் நேரும்போதெல்லாம், சரியாக ஏதோவொன்று தற்செயலாக நடந்து அவர் அதிலிருந்து நூல் பிடித்துத் தப்பித்துவிடுகிறார். இது லூப்பில் நடக்க, திரைக்கதையை யூகிப்பது நமக்கு எளிதாகிவிடுகிறது. இதில் படத்தில் ஆங்காங்கே என்கவுன்ட்டர்களையும் லாக்கப் மரணங்களையும் ஆதரிக்கும் காட்சியமைப்புகள் வேறு.
ஒன்லைனை மட்டும் வைத்து டெக்னாலஜி மேல் பழியைப் போட்டுப் படமெடுத்துவிடலாம் என நினைக்காமல் கொஞ்சம் அக்கறையோடு ரிசர்ச் செய்திருந்தால் ‘சக்ரா’ குறைந்தபட்சம் ஒருமுறையாவது ஈர்த்திருக்கும்.