புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் சேந்தன்குடியைச் சேர்ந்தவர் தங்க கண்ணன் இவரது மகன் தமிழழகன். தமிழழகன் சேந்தன்குடி அரசு உயர் நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். இந்த மாணவன் தனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும், தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுக்கு கேக், சாக்லெட் போன்ற தின்பண்டங்களைக் கொடுப்பதில்லை. மாறாகப் பிறந்த நாளின் போது, ஒவ்வொரு மாணவருக்கும் மரக்கன்றுகளைக் கொடுத்துவருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அந்த வகையில், இந்த வருடம் தனது 15-வது பிறந்த நாளைக் கொண்டாடிய தமிழழகன், பள்ளியில் படிக்கும் சக மாணவ, மாணவிகள் 220 பேருக்கும் தலா ஒரு மரக்கன்றுகள் வீதம், பலா மரக்கன்றுகளைப் பிறந்த நாள் பரிசாகக் கொடுத்து அசத்தினார். அதோடு, பள்ளி ஆசிரியர்களுக்கு மரக்கன்றுகளோடு, தங்கள் வீட்டுத் தோட்டத்தில் விளைந்த அத்திப்பழம், பனங்கிழங்குகளைக் கொடுத்து நெகிழ வைத்திருக்கிறார்.
இதுபற்றி மாணவன் தமிழழகனிடம் கேட்டபோது, ``எங்க வீட்டைச் சுத்திலும் ஆயிரக்கணக்குல மரங்கள் இருக்கு. எல்லா மரங்களையும் நடவு செஞ்சது என்னோட தாத்தா தங்கசாமிதான். மரம் வளர்ப்பு மேல ஆர்வமா இருக்க என் தாத்தா அவர் மரம் வளர்த்ததோட, சைக்கிள்ல விழிப்புணர்வு செஞ்சு மக்களை மரம் வளர்க்க ஊக்குவித்தார்னு அப்பா அடிக்கடி சொல்லுவாரு. தாத்தாவுக்கு அப்புறம் எங்க அப்பா, மக்கள்கிட்ட மரக்கன்றுகள் நடுறதுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்திக்கிட்டு வர்றாரு. தாத்தா, அப்பாவைப் பார்த்துத்தான் எனக்கும் மரம் வளர்ப்பு மேல ஆர்வம் வந்துச்சு. 1-ம் வகுப்புலயிருந்து இப்ப 9-ம் வகுப்பு வரைக்கும் என்னோட ஒவ்வொரு பிறந்தநாளப்பவும், ஸ்கூல்ல மரக்கன்று நடுறதோட, என் பள்ளியில படிக்கிற பிள்ளைங்க எல்லாருக்கும் மரக்கன்றுகள் கொடுத்திடுவேன்.

நான் முன்னாடி கொடுத்த மரக் கன்றுங்க எல்லாம், அவங்க வீட்டுல இப்போ காய் காய்ச்சிக்கிட்டு இருக்கு. அதனாலேயே, மாணவர்கள் நான் கொடுக்கிற மரக்கன்றுகளை ஆர்வமா வாங்கிக்குவாங்க. இந்த வருஷம், முழுசா பலா கன்றுகளைக் கொடுத்தேன். ரொம்ப ஆர்வமா வாங்கிக்கிட்டாங்க. தாத்தா, அப்பா மாதிரி எனக்கும் மக்கள்கிட்ட மரக்கன்றுகள் பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தணுங்கிறதுதான் என்னோட ஆசை" என்கிறார்.