ராஜஸ்தானில் பசுவதை செய்வோர் கொல்லப்படுவார்கள் - பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

ராஜஸ்தானில் பசுவதை செய்வோர் கொல்லப்படுவார்கள் - பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு
"ராஜஸ்தானில் பசு கடத்திச் செல்பவர்களும், வதை செய்பவர்களும் நிச்சயமாக கொல்லப்படுவார்கள்" என அந்த மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராம்கர் பகுதியில் பசுக்களை கடத்திச் சென்றதாக காவல்துறையினர் ஜாகிர் கான் என்பவரை கைதுசெய்துள்ளனர். போலீஸார் அவரைக் கைது செய்வதற்கு முன்னதாக மர்மக் கும்பல் ஒன்று அவரை கடுமையாகத் தாக்கி உள்ளது.
ஜாகிர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்குறித்து ராம்கர் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ., கயன் தேவ் அகுஜாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "பசுவை கடத்திச் சென்ற லாரியைப் பொதுமக்கள் துரத்திச் சென்றுள்ளனர். அப்போது வாகனம் நிலைதடுமாறியதாலேயே அவர் காயமடைந்தார். ஆனால், தனது தவறை மறைப்பதற்காக கிராமத்தினர்தான் தன்னைத் தாக்கியதாக அவர் இப்போது கூறிவருகிறார். அதேபோல, பசு நமது தாய் போன்றது. பசுவைக் கடத்தினாலோ அல்லது வதை செய்தாலோ அவர் நிச்சயமாக கொல்லப்படுவார்" என்றார் அவர். கயன் தேவ்வின் இந்தப் கருத்துக்கு சமூக ஆர்வலர்களிடம் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.