`ரூ.15,000 கடனுக்கு அடமானம்!'- கரூரில் 13 வயது சிறுமிக்கு நடந்த அதிர்ச்சி திருமணம்

அன்றாடம் கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்திவரும் அந்தத் தம்பதியால், தாங்கள் கடனாகப் பெற்ற ரூ.15,000 பணத்தை திருப்பிச் செலுத்த முடியவில்லை.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள கவுண்டனூரைச் சேர்ந்தவர் மூக்கன் (வயது 45). இவரின் மனைவி அஞ்சலம் (40). இவர்களின் மகன் சரவணகுமார் (23). இவர்களிடம், கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ரூ.15,000 கடன் வாங்கி இருந்தனர்.
அன்றாடம் கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்திவரும் அந்தத் தம்பதியால், தாங்கள் கடனாகப் பெற்ற ரூ.15,000 பணத்தை திருப்பிச் செலுத்த முடியவில்லை.

இதனால், மூக்கனும் அவரின் மனைவி அஞ்சலமும் தாங்கள் கொடுத்த கடனுக்கு அடமானமாக, கடன் வாங்கிய தம்பதியின் 13 வயது மகளை மகன் சரவணகுமாருக்குத் திருமணம் செய்துவைக்க வற்புறுத்தியுள்ளனர். வேறு வழியில்லாததால், அந்தத் தம்பதியினரும் சம்மதம் தெரிவித்தனர்.
அதன்படி, இரு வீட்டாரும் பேசி கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி குஜிலியம்பாறையில் உள்ள கரிக்காலி பெருமாள் கோயிலில் வைத்து சரவணகுமாருக்கு 13 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைத்தனர்.
கடந்த 5 மாதங்களாக சரவணக்குமார் அந்தச் சிறுமியுடன் குடும்பம் நடத்திவந்தார். இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லாத அந்தச் சிறுமி, தனக்குத் திருமணம் நடந்தது குறித்து குழந்தைகள் நல உதவி மையத்துக்குத் தகவல் கொடுத்தார். அதன்பேரில், கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து, குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) அன்னம் தலைமையிலான போலீஸார், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டார்கள்.

விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடந்தது உண்மைதான் என்பதைக் கண்டறிந்தனர். அதைத்தொடர்ந்து, போக்ஸோ சட்டத்தின் கீழ், சரவணகுமாரையும், குழந்தை திருமண தடுப்புச் சட்டப்பிரிவின்கீழ் சரவணகுமாரின் பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் 5 பேரும் கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார், சிறுமி.