உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்ட பங்கர்மாவ் பகுதியிலுள்ள நர்ஸிங் ஹோம் ஒன்றில், கடந்த சனிக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட 18 வயது செவிலியரின் மரணத்தில், அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டாரா என்று போலீஸ் விசாரித்துவந்தனர். இந்த நிலையில், தூக்குப் போட்டுக் கொண்டதால்தான் அப்பெண் உயிரிழந்தார் என மருத்துவப் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தற்போது தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, மருத்துவமனையொன்றில், செவிலியராகப் பணிபுரிந்துவந்த இந்தப் பெண், அங்கு ஓர் இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறிய பிறகு, திடீரென அந்த இளைஞன் அந்தப் பெண்ணை விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால், அப்பெண் பெரும் மன அழுத்தத்துக்கு உள்ளானதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தான் புதிதாக பணிக்குச் சேர்ந்த புதிய நர்ஸிங் ஹோமில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான விசாரணை குறித்துப் பேசிய அதிகாரியொருவர், ``சம்பந்தப்பட்ட இளைஞன் சந்தீப் என அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக பெண்ணின் தாயாரின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில், சந்தீப் தற்கொலைக்குத் தூண்டியிருப்பதாகவும் புகார் வந்திருப்பதாக அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், செவிலியரின் மருத்துவப் பிரேத பரிசோதனை அறிக்கையில், அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக ஏதுவும் உறுதிசெய்யப்படவில்லை, தூக்குப்போட்டுக் கொண்டதால்தான் உயிரிழந்திருக்கிறார் என்றும் கூறப்பட்டிருப்பதாக உன்னாவ் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சசிசேகர் சிங் கூறியுள்ளார்.
மேலும் இந்த வழக்கில், செவிலியரின் தாயார் முன்னதாக, நர்ஸிங் ஹோம் நிர்வாகத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட மொத்தம் நான்கு நபர்கள், தன் மகளைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாகக் குற்றம்சாட்டியிருந்தார். அதனடிப்படையில், போலீஸார் வழக்கு பதிவுசெய்து, நர்ஸிங் ஹோமுக்கு சீல் வைத்து, செவிலியரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.