கடந்த 2-ம் தேதி கர்நாடக மாநிலம், பெங்களூரிலிருக்கும் பிரசிடென்ஸி கல்லூரிக்குள் நுழைந்த வாலிபர் ஒருவர், தன் காதலை ஏற்கமறுத்த 19 வயது மாணவியைக் கத்தியால் குத்திக் கொலைசெய்தார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் பெங்களூரில் நிகழ்ந்திருக்கிறது.
பெங்களூரையடுத்த சண்போகநஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஷி (19), ஏலஹங்கா கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.ஏ பயின்றுவந்தார். நேற்று, கல்லூரி முடிந்து பஸ்சில் திப்பூர் வந்திறங்கி, வழக்கம்போல வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்திருக்கிறார். அப்போது, பைக்கில் வந்த இரு வாலிபர்கள் ராஷியை வழிமறித்து, தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து ராஷியின் கழுத்தை அறுத்து, ரத்தவெள்ளத்தில் ராஷியை அங்கேயே விட்டுத் தப்பிச்சென்றனர்.

ரத்தவெள்ளத்தில் துடிதுடித்துக்கிடந்த ராஷியை அக்கம் பக்கத்தினர் மீட்பதற்குள், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்தச் சம்பவம் குறித்து, ராஜனுகுந்தே பகுதி போலீஸார் விசாரித்துவருகின்றனர்.
இது குறித்து போலீஸாரிடம் பேசினோம். ``கல்லுாரி மாணவி கொலைசெய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. காதல் விவகாரத்தால் கொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரிக்கிறோம்.

அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து, தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடிவருகிறோம். ராஷியின் மொபைல் போன் அழைப்புகளை ஆய்வுசெய்து, அவரின் நண்பர்களிடமும் விசாரிக்கிறோம்’’ என்றனர்.
பெங்களூரில் காதல் விவகாரம் தொடர்பாக, கல்லுாரி மாணவிகள் கொலைசெய்யப்படுவது அதிகரித்துவருவதால், மாணவிகளும், பெற்றோரும் அச்சமடைந்திருக்கின்றனர்.