சென்னை மாங்காடை அடுத்த மதனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவர் காய்கறி வியாபாரம் செய்து தனது குடும்பத்தைக் கவனித்துவருகிறார். இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். இவரின் இளைய மகள் இளங்கலை முடித்துவிட்டு, முதுகலை முதலாண்டு படித்துவருகிறார். இவர் தேசிய அளவிலான கபடி வீராங்கனை. இந்த நிலையில், நேற்று மாலை இவர் தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இவரின் பெற்றோர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், இவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். பின்னர் போலீஸாருக்கு இது குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து தற்கொலை செய்துகொண்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக போரூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தொடர்ந்து, பெற்றோர், உறவினர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணையில், ராஜஸ்தானில் கபடிப் போட்டியை முடித்துவிட்டு நேற்று காலை வீட்டுக்கு வந்த இவர், தன் அக்காவிடம் சப் இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதப்போவதாகக் கூறியுள்ளதாக போலீஸார் கூறினர். மேலும் இந்த முதற்கட்ட விசாரணையில் வேலை கிடைக்காத விரக்தியில்தான் இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரியவந்துள்ளது எனவும் போலீஸார் கூறியுள்ளனர். இது மட்டுமல்லாமல் தற்கொலைக்கான காரணங்கள் வேறு ஏதேனும் இருக்கின்றனவா எனவும் விசாரித்துவருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
