நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றிவந்தவர் மோகன கிருஷ்ணன். அமைச்சுப் பணி அலுவலரான இவர்மீது சக பெண் பணியாளர்கள் பாலியல் புகார் அளித்திருக்கின்றனர். இந்தப் புகார் குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் தலைமையில் குழு அமைத்து விசாரித்துவந்திருக்கின்றனர்.

சக பெண் பணியாளர்களிடம் அமைச்சுப் பணி அலுவலர் மோகன கிருஷ்ணன் பாலியல் தொந்தரவு கொடுத்துவந்தது உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஊட்டி நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மோகன கிருஷ்ணன் மீது வழக்கு பதிவுசெய்து கைதுசெய்தனர். கைதான மோகன கிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து நீலகிரி காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள், ``51 வயதான அமைச்சுப் பணி அலுவலர் மோகன கிருஷ்ணனுக்கு மனைவி, இரண்டு மகன்கள் இருக்கின்றனர். எஸ்.பி அலுவலகத்தில் தன்னுடன் பணியாற்றிவந்த சக பெண் பணியாளர்களுக்குப் பல ஆண்டுகளாகவே பாலியல்ரீதியான தொந்தரவு கொடுத்துவந்திருக்கிறார்.

உயர் அலுவலர் என்பதால் பாதிக்கப்பட்ட பெண் பணியாளர்கள் வெளியில் சொல்ல பயந்து அமைதியாக இருந்துவந்திருக்கின்றனர். இதைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்ட மோகன கிருஷ்ணனின் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் பணியாளர்கள் அளித்த புகாரின் உண்மைத்தன்மையைக் கண்டறிந்து அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடத்தப்படும்" என்றனர்.