மதுரை வில்லாபுரத்தில் மணிகண்டன் என்பவர், மனைவி லெட்சுமி, இரு குழந்தைகளுடன் வசித்துவந்திருக்கிறார். இவர், சோலை அழகுபுரத்தில் நகைக்கடை நடத்திவருவதோடு, இந்து மக்கள் கட்சியின் தென்மாவட்ட துணைச் செயலாளராகவும் இருந்துவருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் நகைக்கடையை அடைத்துவிட்டு எம்.கே புரத்தில் நடந்து சென்றபோது, மர்மக் கும்பல் ஒன்று அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
போலீஸ் ஸ்டேஷன் அருகில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி கொலைசெய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீஸார் உடனே வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அதே போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் ஏட்டு ஹரிஹரபாபு கூலிப்படையை ஏவி மணிகண்டனைக் கொலை செய்தது போலீஸாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து நம்மிடம் பேசியவர்கள், ``ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் ஸ்டேஷனில் நீதிமன்ற குற்ற வழக்குகளைக் கண்காணித்துவந்த ஏட்டு ஹரிஹரபாபு, பல குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களைக் கூலிப்படையினராகப் பயன்படுத்தி மணிகண்டனைக் கொலைசெய்தது தெரியவந்திருக்கிறது.
கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தபோது இருவருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. தொழிலுக்காக மணிகண்டன் இவரிடம் கடன் வாங்கி, அதையும் திரும்பக் கொடுக்காமல் இருந்துவந்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. அதனால் தனக்குத் தெரிந்த குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்து அவர்களைப் பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறார்.

இதையடுத்து, தூத்துக்குடியைச் சேர்ந்த 'மாடு' தினேஷ், ஜெய்ஹிந்த்புரம் 'குட்ட' அஜித், அய்யப்பன், 'பல்லு' கார்த்திக், 'புறா' பாண்டி , ஹைதர் அலி ஆகியோர் மூலம் மணிகண்டனைக் கொலைசெய்வதற்காக நான்கு லட்சம் ரூபாய் தருவதாகக் கூறி அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார். இதையடுத்து, மணிகண்டனைத் தொடர்ந்து கண்காணித்துவந்த கும்பல் நேற்று முன்தினம் இரவில் அவரை வெட்டிக் கொலைசெய்திருக்கிறது.
ஏட்டு ஹரிஹரபாபு உள்ளிட்ட ஏழு பேரை ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இன்னும் சிலரைத் தேடிவருகின்றனர். கொலைக்கு வேறு காரணங்கள் இருக்குமா எனவும் விசாரித்துவருகின்றனர்'' என்றனர். போலீஸ் அதிகாரி ஒருவர் கூலிப்படையை ஏவி ஓர் அமைப்பின் நிர்வாகியைக் கொலைசெய்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.