சேலம் ஆத்தூர் அருகே மஞ்சினி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இது சுற்றுவட்டாரத்தில் முக்கியப் பள்ளி என்பதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ப்ளஸ் டூ மாணவர் தலைமுடி வெட்டாமல் பின்பக்கம் கொண்டை முடியுடன் வந்திருக்கிறார். அவரைத் தலைமையாசிரியர் அழைத்துக் கண்டித்திருக்கிறார். அதற்கு அந்த மாணவர், ``நான் மட்டும்தான் இப்படி வர்றேன்னா மத்தவங்கள கேட்க மாட்டுறீங்க" என்று தலைமையாசிரியர் அலுவலகத்தில் சத்தம் போட்டுக் கத்தியதுடன், டேபிளில் இருந்த கண்ணாடிப் பொருள்கள் உள்ளிட்டவற்றை உடைத்திருக்கிறார். சத்தம் கேட்டு வந்த ஆசிரியர்கள், மாணவரைச் சமாதானப்படுத்தி பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளனர். பெற்றோரை அழைத்து வரச் சென்ற மாணவன், வரும்போது பீர் பாட்டிலை சட்டையில் மறைத்துவைத்து எடுத்துவந்திருக்கிறார்.
மாணவர் செய்த செயலைப் பற்றித் தலைமையாசிரியர் பெற்றோரிடம் சொல்லிக்கொண்டிருக்க, மறைத்துவைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து தலைமையாசிரியரைக் குத்த முயன்றிருக்கிறார் அந்த மாணவர். இதனால் பதறிப்போன தலைமையாசிரியர் சத்தம் போட, அருகிலிருந்த சக ஆசிரியர்கள் ஓடிவந்து மாணவரைப் பிடித்து அவர் கையிலிருந்த பாட்டிலை வாங்கினர்.

பயந்துபோன தலைமையாசிரியர் தனது அறையை உட்பக்கமாகப் பூட்டிக்கொண்டு, ஆத்தூர் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்துள்ளார். பின்னர் பள்ளிக்கு வந்த போலீஸார் மாணவரைச் சமாதானப்படுத்திப் பேசுகையில், `இப்படிப்பட்ட செயல்களில் ரெளடிகள்தான் ஈடுப்படுவாங்க. நீ படிக்கிற பையன்’ என்று சொல்ல, அதற்கு மாணவர், `நானும் ரெளடிதான் இப்ப என்ன பண்ணணும்’ என்று எதிர்த்து பேசியுள்ளார். இதனால் அறிவுரை கூறவந்த போலீஸாரும் எதுவும் சொல்ல முடியாமல் கண்டித்துவிட்டுத் திரும்பிச் சென்றுள்ளனர்.
தலைமுடியைச் சரிசெய்யக் கூறியதற்காக தலைமையாசிரியரை மாணவன் பீர் பாட்டிலால் குத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.