விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மலையடிவாரப் பகுதியில் சாம்பல் நிற அணில்களின் சரணாலயம் இயங்கிவருகிறது. இங்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் சரணாலயமும் அமையவுள்ளது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்பது தொடர்கதையாகிவருகிறது. கடந்த ஐந்து நாள்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கான்சாபுரம் அருகிலுள்ள பெரிய ஓடைப் பகுதியிலிருந்து மூலக்காடு கிராமத்துக்குச் செல்லும் பகுதியில் இரண்டு சாக்குப்பைகளிலிருந்து ஒன்பது நாட்டு வெடிகுண்டுகளை வனத்துறையினர் பறிமுதல்செய்தனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஒன்பது வெடிகுண்டுகளும் செயலிழக்கச் செய்யப்பட்டன. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தினமும் கடந்து செல்லும் வழியில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதால் விவசாயிகள் மத்தியில் அச்சம் நிலவியது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது தொடர்பாக போலீஸார், மூன்று பேரைக் கைதுசெய்தனர். இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள தெற்கு கோட்டையூர் மேற்கு காலனிப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்த காலனிப் பகுதியிலுள்ள ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளியின் பின்புறம் உள்ள தரிசு நிலத்தின் வழியே பாலசுப்பிரமணியன் என்ற விவசாயி டிராக்டர் ஓட்டிச் சென்றிருக்கிறார்.

அப்போது அங்கு கிடந்த நாட்டுவெடிகுண்டு ஒன்று டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. ஆனால், விவசாயி பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அப்பகுதியில் நடமாடிச் சென்ற ஊர் மக்கள் யாருக்கும், எந்தக் காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து வத்திராயிருப்பு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அப்பகுதியில் பொதுமக்கள் நுழைந்துவிடாதபடி கயிறுகளால் கட்டப்பட்டு, பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். வெடிகுண்டு வெடித்த இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் செய்த ஆய்வில் மேலும் ஆறு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த மாரிச்சாமி, அழகர்சாமி, முருகன், முத்தையா ஆகிய நான்கு பேரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் வனப் பகுதியில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் காணப்படுகின்றன.

இவை, உணவு தேடி தென்னந்தோப்பு, காய்கறி மற்றும் பழத்தோட்டத்துக்கு வருவது வழக்கம். காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வெடிகுண்டுகள் பதுக்கிவைக்கப்பட்டனவா அல்லது நாச வேலைகளுக்காகப் பதுக்கிவைக்கப்பட்டனவா என போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். விவசாயிகள், பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் வெடிகுண்டுகள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.