சென்னை: புதிய காதலனால் பழைய காதலனை மறந்த காதலி! - சோகத்தில் மூழ்கிய திருமண வீடு

சென்னையில் கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதலித்தவர்கள் திருமணம் வரை சென்ற பிறகு பிரிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். இவருடன் பணியாற்றும் நெமிலிச்சேரியைச் சேர்ந்த 24 வயதான இளைஞரும் கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதலித்துவந்தனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் கிரீன் சிக்னல் காட்டினர். அதனால் இரு வீட்டினர் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் நடந்தன. வில்லிவாக்கத்திலுள்ள திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடந்தது. வரவேற்பில் மணமக்களை உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்தினர்.

நேற்று காலை இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. வரவேற்பு முடிந்ததும், மணமகளும் மணமகனும் தங்களின் அறைகளுக்குச் சென்றனர். நேற்று காலை மணமகளின் அறைக்கு அவரின் அம்மா சென்றார். அங்கு மணமகள் இல்லை. அதனால் மண்டபத்தில் மணமகளைத் தேடினர். அவரின் செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அதனால் திருமண நாளில் மணமகள் மாயமான தகவல் மண்டபம் முழுவதும் காட்டுத்தீபோலப் பரவியது.
மணமகனும் அவரின் குடும்பத்தினரும் ஏமாற்றமடைந்தனர். பின்னர் மணமகளின் குடும்பத்தினர் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் கிண்டி காவல் நிலையத்தில் மணமகளும் இளைஞர் ஒருவரும் வந்தனர். போலீஸாரிடம் விவரத்தைக் கூறிய மணமகள், இளைஞரைத் திருமணம் செய்யப்போவதாகக் கூறினார். பின்னர் இந்தத் தகவல் வில்லிவாக்கம் காவல் நிலையத்துக்கும், மணமகளின் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டது.

தகவல் கிடைத்ததும் மணமகளின் குடும்பத்தினர் கிண்டி காவல் நிலையத்துக்குச் சென்றனர். அங்கு மணமகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ``நான், அவரை நான்கு ஆண்டுகளாகக் காதலித்தது உண்மைதான். அதனால் அவர் குறித்த உண்மைகளைத் தெரிந்துகொண்டேன். தற்போது இவரைத்தான் காதலிக்கிறேன். இவரைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன்’’ என்று உறுதியாகக் கூறினார். மணமகளின் இந்த முடிவால் முதல் காதலுனும், மணமகளின் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர்.
மணமகளிடம் அவரின் குடும்பத்தினரும், நான்கு ஆண்டுகளாகக் காதலித்தவரும் பேசிப்பார்த்தனர். ஆனால், மணமகள் மனம் மாறவில்லை. இதையடுத்து மணமகள் மேஜர் என்பதால், அவரின் முடிவை வேறு வழியின்றி அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து மணமகள் புதிய காதலனுடன் காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

திருமணம் நின்றுபோன தகவல் தெரியாமல் மண்டபத்துக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மணமகளின் இந்த முடிவால் திருமண வீடு சோகத்தில் மூழ்கியது.