சென்னை சித்தாலப்பாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு இளைஞர் ஒருவர் நேற்று காலை பெட்ரோல் நிரப்ப வந்திருக்கிறார். பெட்ரோலுக்கு பணமாக 500 ரூபாயை கொடுத்திருக்கிறார். அந்த ரூபாய் நோட்டை பெட்ரோல் பங்க் ஊழியர் பார்த்தபோது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக பெட்ரோல் பங்க் மேலாளர் சந்திரசேகரனுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சந்திரசேகரன், 500 ரூபாய் நோட்டை பரிசோதித்து பார்த்தபோது அது கள்ள நோட்டு என தெரியவந்தது. அதனால் 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்றவரைப் பிடித்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரிடம் விசாரித்த போது அவரின் பெயர் பிரபாகரன் (33), விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா, பாங்கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது.
இதையடுத்து பிரபாகரனிடம் போலீஸார் விசாரித்த போது 500 ரூபாய் கள்ள நோட்டை தன்னுடைய சகோதரர் கொடுத்ததாக கூறினார். அதனால் பிரபாகரனின் சகோதரர் பிரகதீஸ்வரன் (35) என்பவரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவரிடம் 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் 42 இருந்தன. அதை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் சிறையில் அடைத்தனர்.

அண்ணன் பிரகதீஸ்வரனுக்கு யார் கள்ள நோட்டுக்களைக் கொடுத்தது என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். அதன்பிறகு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெரும்பாக்கம் போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து பெரும்பாக்கம் போலீஸார் கூறுகையில், ``பெட்ரோல் பங்கில் 500 ரூபாய் கள்ள நோட்டைக் கொடுத்து பெட்ரோல் நிரப்பி விட்டு சில்லறைக்கூட வாங்காமல் தப்பிக் முயன்ற இளைஞர் மீது ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அதன்பிறகு, அந்த நபரைப் பிடித்த ஊழியர், அவர் கொடுத்த ரூபாய் நோட்டை ஆய்வு செய்திருக்கிறார். அதன்பிறகுதான் கள்ள நோட்டு விவரம் தெரியவந்திருக்கிறது. அண்ணன் பிரகதீஸ்வரனுக்கு தாம்பரத்தைச் சேர்ந்த ஒருவர் 500 ரூபாய் கள்ள நோட்டுக்களை கொடுத்திருக்கிறார். அவரைப் பிடித்தால்தான் கள்ள நோட்டு கும்பல் குறித்த விவரம் தெரியவரும்" என்றனர்.