சென்னை: பஸ்ஸுக்குக் காத்திருந்த இளம்பெண்ணிடம் வம்பிழுத்த காவலர் - ரவுண்டு கட்டிய பொதுமக்கள்!
சென்னை வடபழனியில் பஸ்ஸுக்காகக் காத்திருந்த இளம்பெண்ணிடம் வம்பிழுத்த காவலரைச் சுற்றிவளைத்த இளம்பெண்கள், பொதுமக்கள், அடித்து உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
சென்னை வடபழனியிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றிவருபவர் ரதி (20). (பெயர் மாற்றம்). இவர், நேற்றிரவு பணி முடித்து வீடு திரும்ப வடபழனி 200 அடி சாலை நெடும்பாதை அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். தனியாக நின்றுகொண்டிருந்த ரதிக்கு நீண்டநேரமாக பஸ் கிடைக்கவில்லை. அந்தச் சமயத்தில் மழை பெய்ததால், சாலையிலும் பொதுமக்களின் நடமாட்டம் இல்லை. அப்போது, பைக்கில் வந்த ஓர் இளைஞர், பேருந்து நிறுத்தத்தில் தனியாக இளம்பெண் நிற்பதைப் பார்த்ததும் உடனடியாக அங்கு பைக்கை நிறுத்தியிருக்கிறார்.
பின்னர் ரதியிடம், `நீங்கள் எங்கு செல்ல வேண்டும்?’ என்று அந்த இளைஞர் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் அமைதியாக இருந்தார். அதன் பிறகும் இளைஞர், `பஸ் வர லேட்டாகும். நான் உங்களை அழைத்துச் செல்கிறேன்’ என்று கூறியிருக்கிறார். அதற்கு ரதி, `நான் வரவில்லை’ என்று கூறியபடி பஸ்ஸை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அதன் பிறகும் விடாத இளைஞர், ரதியை வலுகட்டாயமாக பைக்கில் ஏற்ற முயன்றிருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த ரதி, `நீங்கள் யார்... நான் ஏன் உங்களுடன் பைக்கில் வர வேண்டும்’ என்று இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆனால் அந்த இளைஞர், மீண்டும் மீண்டும் ரதியின் பேச்சைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், அநாகரிகமாக நடந்திருக்கிறார். அந்த இளைஞர் மதுபோதையில் இருப்பதைத் தெரிந்துகொண்ட ரதி, உடனடியாக செல்போனில் தனக்குத் தெரிந்தவர்களுக்குத் தகவல் தெரிவித்தார். அவர்கள் பேருந்து நிறுத்தத்துக்கு வந்தனர். அப்போதும் இளைஞர், ரதியிடம் தகராறு செய்திருக்கிறார். ரதிக்கு ஆதரவாக வந்த பெண்கள், பொதுமக்கள் போதையிலிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். அப்போதுதான் அவர் காவல் சீருடையில் இருந்தது தெரியவந்தது. மேலும், போதையில் இருந்த காவலரும் தகராறில் ஈடுபட்டார்.
ஆத்திரமடைந்த பெண்கள், தங்களின் காலனியைக் கழற்றி காவலரைத் தாக்கத் தொடங்கினார். பொதுமக்களின் பிடியில் சிக்கிக்கொண்ட காவலரால் எதுவும் செய்ய முடியவில்லை. காவலரைப் பெண்கள் தாக்கும் காட்சியை சிலர், தங்களின் செல்போன்களில் வீடியோவாக எடுத்தனர். பின்னர், வடபழனி காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸார் அங்கு வந்து காவலரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையில் காவலரின் பெயர் ராஜூ எனத் தெரியவந்தது. இவர், எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றுவதும் தெரிந்தது. தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.
காவலரைப் பெண்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.