கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் பொறியியல் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படித்துவந்தார் அந்த மாணவர். தன் நண்பருடன், அறை எடுத்துத் தங்கியிருந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு வாந்தி எடுத்ததால், சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியிலேயே, அந்த மாணவர் இறந்துவிட்டார்.
இது குறித்து மாணவரின் தந்தை கொடுத்த புகாரின்பேரில், இயற்கைக்கு முரணான மரணம் என வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, மாணவனின் பிரேத பரிசோதனையில் இடது முன் கையில் நரம்பு வழியாக போதை ஏற்படுத்தக்கூடிய மருந்துகளை ஊசி மூலம் ஏற்றப்பட்டதால் இறப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.

இறந்த மாணவர் வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தண்ணீரில் கரைத்து சிரிஞ்சு (Syringe) மூலமாக போதைக்காகத் தனக்குத் தானே செலுத்திக்கொண்டது தெரியவந்தது.
மாணவனின் நண்பர்களை விசாரணை செய்ததில், மேற்கண்ட வலி நிவாரண மருந்தை கும்பகோணத்தில் தனியார் மருந்துக்கடை வைத்திருக்கும் முகமது பஷீர் என்பவர் மருத்துவர் பரிந்துரை இல்லாமல், லாப நோக்கத்தோடு விற்பனை செய்தது தெரியவந்தது. உடனடியாக வழக்கின் சட்டப்பிரிவை மாற்றம் செய்த போலீஸார், முகமது பஷீரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

``மாணவர்கள் இளம் வயதிலேயே போதை போன்ற தவறான வழியில் செல்லக் கூடாது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எவ்வித மருந்துகளையும் உட்கொள்ளக் கூடாது.” என கோவை எஸ்.பி பத்ரி நாராயணன் அறிவுறுத்தியிருக்கிறார்.