தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள குமுளி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிபவர் நல்லதம்பி. இவருக்கும் சார்பு ஆய்வாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 5 மாதங்களாக கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் தற்காலிகமாகப் பணிசெய்து வருகிறார். அதில் கூடலூர் வடக்கு, கூடலூர் தெற்கு, குமுளி காவல் நிலையங்களில் பதிவுசெய்யப்படும் போதைப்பொருள்கள் வழக்கு சம்பந்தமாக மதுரை சிறப்பு அமர்வு நீதிமன்ற, குடிமைப்பொருள் அமர்வு நீதிமன்ற அலுவல்களுக்காகப் பணிகளைச் செய்துவந்திருக்கிறார். இந்த நிலையில், வழக்குகளில் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டிய கஞ்சா பொட்டலங்களை எடுத்து நல்லதம்பி விற்பனை செய்திருக்கிறார்.

இதற்கிடையே, நல்லதம்பி கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், கஞ்சா விற்பனை செய்துவருவது குறித்தும் ஐ.ஜி தலைமையிலான தனிப்படையினருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. தனிப்படை போலீஸார் விசாரணையில், நல்லதம்பி, சின்னமனூரைச் சேர்ந்த கணேசன், சின்ன ஓவுலாபுரத்தைச் சேர்ந்த நல்லதம்பி, எரசநாயக்கனூரைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து சரவணக்குமார் என்பவருக்கு 7,000 ரூபாய்க்கு கஞ்சா விற்றது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இதுபோல தொடர்ச்சியாகக் கஞ்சா விற்பனை செய்தததும் தெரியவந்திருக்கிறது.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும், கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததும் உறுதிசெய்யப்பட்டதால் திண்டுக்கல் சரக ஐ.ஜி உத்தரவின்படி, கம்பம் வடக்கு காவல்துறையினர் காவலர் நல்லதம்பி மீது வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். மேலும் அவர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
காவலர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.