அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி உடையானம்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவருடைய மனைவி ராக்கம்மாள் (52), முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர். தற்போது, விருதுநகர் தி.மு.க வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராகப் பதவி வகித்துவருகிறார். இவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் இருக்கின்றனர். மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிகிறார். மற்ற இருவரும் கல்லூரியில் படித்துவருகின்றனர். மகள் திருமணம் முடிந்து குடும்பத்துடன் வசித்துவருகிறார்.
ராக்கம்மாளின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் வீட்டில் ஆறுதலுக்கு ஆளில்லாமல் வசித்துவந்த அவர், பெற்றோர் இல்லாமல் தனியே தவித்துவந்த தன் சகோதரி மகளைத் தத்தெடுத்து வளர்த்துவந்தார். இந்த நிலையில், தன் வளர்ப்பு மகளுக்கும், அதே ஊரைச் சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் ராக்கம்மாள் திருமணம் முடித்துவைத்தார். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே, கருத்து வேறுபாடு காரணமாக மூர்த்தியும் அவர் மனைவியும் பிரிந்து வாழ்ந்துவந்துள்ளனர். இதனால் மூர்த்தி மன வருத்தத்திலிருந்திருக்கிறார். தன் மனைவி பிரிந்து சென்றதற்கு ராக்கம்மாள்தான் முழுக் காரணம் என நினைத்து மூர்த்தி அவர்மீது கடும் கோபத்திலிருந்திருக்கிறார். இதற்காக அவரைப் பழிவாங்க நினைத்து, தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்திருக்கிறார் மூர்த்தி.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு, மூர்த்தி தன் உறவினர்கள் உதவியுடன் ராக்கம்மாள் வீட்டை நோட்டமிட்டு அவரைக் கொலைசெய்யத் திட்டம் தீட்டியதாகத் தெரிகிறது. அப்போது, ராக்கம்மாள் வீட்டில் தனியாக இருப்பதைத் தெரிந்துகொண்ட மூர்த்தி, திடீரென அவரின் வீட்டுக்குள் நுழைந்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் ராக்கம்மாளுக்கு கை, தோள்பட்டை, வயிறு ஆகிய பகுதிகளில் கத்திக்குத்து விழுந்ததில் அதிக ரத்தக்கசிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

ராக்கம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அங்கிருந்து மூர்த்தியும், அவர் உறவினர்களும் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த ராக்கம்மாளை, அவர் உறவினர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சுழி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ராக்கம்மாள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த திருச்சுழி காவல் நிலைய போலீஸார், ராக்கம்மாளைக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிய மூர்த்தி, அவர் சகோதரர் வெற்றிச்செல்வம், உறவினர்கள் முத்துராஜ், லட்சுமி, சபரி ஆகிய ஐந்து பேர்மீது வழக்கு பதிவுசெய்து தேடிவந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த நிலையில், குச்சம்பட்டிபுதூர் அருகே மூர்த்தியும், அவர் சகோதரர் வெற்றிச்செல்வமும் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படையினர் அவர்கள் இருவரையும் கைதுசெய்துள்ளனர். தலைமறைவான மற்ற மூன்று பேரையும் போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இந்தக் கொலை தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டவர்களிடம், போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல தகவல்கள் கிடைத்தன.
இது தொடர்பாக போலீஸாரிடம் பேசினோம். ``ராக்கம்மாளும், மூர்த்தியின் மனைவியும் ஒன்றாகக் கட்சிப்பணி செய்துவந்தது தெரியவந்துள்ளது. இது மூர்த்திக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லையாம்.

மேலும், தன் மனைவி தன்பேச்சைவிடவும், உறவுக்காரரான ராக்கம்மாளின் பேச்சுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக நினைத்திருக்கிறார் மூர்த்தி. இது அவருக்கு மேலும் ஆத்திரத்தை அதிகப்படுத்தியுள்ளது. தொடர்ந்து, கட்சிப் பணிக்காக ராக்கமாளுடன் சேர்ந்துகொண்டு அடிக்கடி வெளியில் சென்றுவிட்டு வெகுநேரம் கழித்து வீடு திரும்புவதும், இதனால் வீட்டு வேலைகளைச் சரிவர கவனிக்காததும் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

கணவன்-மனைவி பிரச்னைகளைப் பெரியவர்களாக முன்னிருந்து பேசி தீர்க்கவேண்டிய ராக்கம்மாளே, அவர்கள் இருவருக்கிடையேயும் பிரச்னையை வளர்த்துவிட்டு வேடிக்கை பார்த்தது சரியல்ல என்று அவர்களின் உறவினர்கள் மத்தியில் சொல்லப்படுகிறது. ஒருகட்டத்தில் தகராறு முற்றவும், இனி உன்னோடு இருக்க முடியாது என மூர்த்தியிடம் கோபித்துக்கொண்டு சோலைமணி தனியே பிரிந்து சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி, தானும் மனைவி சோலைமணியும் பிரிந்ததற்கு ராக்கம்மாள்தான் முழுக்காரணம் எனக் கருதி அவரைக் கொலைசெய்யத் திட்டமிட்டு இந்தச் செயலை அரங்கேற்றியிருக்கிறார்" என்றனர்.
குடும்பப் பிரச்னையில் தி.மு.க பெண் நிர்வாகி குத்திக் கொலைசெய்யப்பட்ட சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.