தேனி மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் ஆட்சித்தலைவர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் அமைந்துள்ளன.

இதில் மாவட்ட திட்ட அலுவலகத்தின் பல்துறை வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அலுவலகத்தில், திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி இன்று பணியில் இருந்தபோது, இதே அலுவலகத்தில் கடந்த 2015-16-ம் ஆண்டுகளில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிய போடியைச் சேர்ந்த உமாசங்கர் என்பவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜராஜேஸ்வரியைச் சரமாரியாக வெட்டினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதனால் ராஜராஜேஸ்வரி உயிர் தப்புவதற்காக அரிவாள் வெட்டுடன் அருகில் இருந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட கண்காணிப்பாளர் முத்துமணியின் அறைக்கு ஓடியுள்ளார். இதைப் பார்த்த முத்துமணி அலறத் தொடங்கியிருக்கிறார். முத்து மணியின் அலறல் சத்தத்தைக் கேட்டு அந்த வளாகத்தில் இருந்த அனைவரும் ஓடிவந்து ராஜராஜேஸ்வரியை வெட்டிய உமாசங்கரைப் பிடித்து, அவரிடமிருந்து அரிவாளைப் பறித்தனர்.

இதைக் கேள்விப்பட்ட மாவட்ட கலெக்டர் முரளீதரன், எஸ்.பி பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று அங்கிருந்த அரசு வாகனத்தில் ராஜராஜேஸ்வரியை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக உமா சங்கரைக் கைதுசெய்த அல்லிநகரம் காவல்துறையினர் தேனி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திவருகின்றனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் உமாசங்கர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்திய ராஜராஜேஸ்வரி, அவரைப் பலமுறை பணியிடமாற்றம் மற்றும் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டிருப்பதும், குறிப்பாக 17b-படி தண்டனை வழங்கியதும் தெரியவந்தது. இதன் காரணமாக உமாசங்கர் பதவி உயர்வு பெற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த முன்விரோதம் காரணமாகத்தான் உமா சங்கர், ராஜராஜேஸ்வரிமீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்.

தற்போது திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் பணியாற்றிவரும் உமாசங்கர், மீண்டும் தேனி மாவட்டத்துக்கு மாறுதல் பெற பல முறை முயன்றபோதும்... அதற்கு ராஜராஜேஸ்வரி தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்ததாகத் தெரிகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விரிவாக விசாரணை நடத்திவருகின்றனர்.
ராஜராஜேஸ்வரியைத் தாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உமாசங்கர் அவரை வெட்டுவதற்காகவே வெள்ளக்கோவிலிலிருந்து இன்று ஒரு நாள் விடுப்பு எடுத்து தேனிக்கு வந்துள்ளார். தேனிக்கு வந்த அவர் ராஜராஜேஸ்வரியின் அலுவலகத்துக்கே சென்று உச்சந்தலை, வலது கன்னம், இடது காது, வலதுகை முட்டி, முதுகு உள்ளிட்ட ஐந்து இடங்களில் வெட்டியுள்ளார். இடது மணிக்கட்டில் சரமாரியாக வெட்டியதால் மணிக்கட்டுக்கு கீழே உள்ள பகுதி துண்டானது. இதனால் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டத்தில் பட்டப்பகலில் அரசு பெருந்திட்ட வளாகத்தில் பெண் அலுவலர், அவரது அலுவலகத்தில்வைத்தே சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.