`இனி என்னால் வாழ முடியாது’ - திருமணமான ஓராண்டுக்குள் விபரீத முடிவெடுத்த உளவுத்துறை அதிகாரியின் மனைவி

சென்னையில், திருமணமான ஓராண்டுக்குள் மத்திய உளவுத்துறை அதிகாரியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை, அடையாறு ராஜாஜி பவனிலுள்ள மத்திய உளவுத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக ஹரிஸ்குமார் (30) என்பவர் பணியாற்றிவருகிறார். இவர் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். இவரின் மனைவி நிகிதா (23). இவரும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர். பி.டெக் படித்த நிகிதாவுக்கும் ஹரிஸ்குமாருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. சென்னை பெசன்ட் நகர், பஜனைக் கோயில் தெருவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இருவரும் வசித்துவந்தனர்.

கடந்த 25-ம் தேதி படுக்கையறையில் நிகிதா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலை செய்வதற்கு முன் நிகிதா கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், `இதற்கு மேல் தன்னால் வாழ முடியாது’ என்றும், `தனது சாவுக்கு யாரும் காரணமில்லை’ எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து நிகிதா மரணம் குறித்து சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ``நிகிதாவின் குடும்பத்தினரிடம் விசாரித்தபோது வரதட்சணைக் கொடுமை, மதமாற்றம் எனச் சில தகவல்களைத் தெரிவித்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி, நிகிதாவின் கணவர் ஹரிஸ்குமார், மாமியார் ரமணி ஆகியோரிடம் விசாரணை நடத்தினோம். நிகிதாவுக்கு திருமணத்தின்போது லட்சக்கணக்கில் வரதட்சணையாகப் பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், நகைகளும் சீர்வரிசைப் பொருள்களும் நிகிதாவின் குடும்பத்தினர் கொடுத்திருக்கின்றனர்.

அதன் பிறகும் நிகிதாவிடம் ஹரிஸ்குமார் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் விசாரணை நடத்திவருகிறோம். நிகிதாவுக்கு திருமணமாகி ஒராண்டே ஆவதால் ஆர்டிஓ விசாரணை நடந்துவருகிறது. ஆர்.டி.ஓ விசாரணை அறிக்கைக்குப் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
இதற்கிடையில் நிகிதாவின் மரணத்துக்கு இன்னொரு காரணமாக மதமாற்றம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அது தொடர்பாகவும் விசாரணை நடந்துவருகிறது. இந்தநிலையில் நிகிதாவின் சடலம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. அதனால் திருமங்கலம் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு எஸ்.ஐ பாரதி சென்று நிகிதாவின் வழக்கு குறித்து விசாரித்திருக்கிறார். அப்போது அங்கிருந்த வருவாய் ஆய்வாளர் ஒருவர், எஸ்.ஐ பாரதியை அவதூறாகப் பேசியதாகச் சொல்லப்படுகிறது. அது தொடர்பாக எஸ்.ஐ., திருமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். இதன் காரணமாக நிகிதாவின் ஆர்.டி.ஓ விசாரணையில் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது.