கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி பகுதியிலுள்ள காவிரி ஆற்றிலிருந்து, தொடர்ந்து மணல் கடத்தலில் சிலர் ஈடுபடுவதாக அங்குள்ள பொதுமக்கள் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துவந்தனர். எனினும், நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில், ஜல்லி, சிமென்ட் கலவை இயந்திரம் பொருத்தப்பட்ட லாரியில் தினமும் மணல் திருடிக்கொண்டு செல்லப்படுகிறது எனக் கூறி, அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அந்தப் பகுதி வழியாக வந்த லாரியைச் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்துத் தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அதோடு, பொதுப்பணித்துறை அதிகாரிகளை வரவழைத்து போலீஸார் விசாரணையைத் தொடர்ந்தனர். தொடர்ந்து, போலீஸார் மக்கள் சிறைப்பிடித்த அந்த ஜல்லி, சிமென்ட் கலவை கொண்டுசெல்லும் லாரிமீது ஏறிப் பார்த்தபோது, கலவை இயந்திரத்தின் உள்ளே நிறைய மணல் இருப்பது தெரியவந்தது.

இந்த மணல் புகழூர் பகுதியில் காவிரி ஆற்றில் கதவணை கட்டும் பணிகளுக்காகக் கொண்டு செல்லப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர். அப்போது, 'திருட்டுத்தனமாக ஏன் சிமென்ட், ஜல்லிக் கலவை கொண்டு செல்லும் லாரியில் மணலைக் கொண்டு செல்கிறீர்கள்... மணல் ஏற்றிச் செல்லும் லாரியில் கொண்டுபோக வேண்டியதுதானே... இப்படி மணலைத் திருடினால், அது நியாயம் ஆகிவிடுமா... இப்படித் தொடர்ந்து மணல் திருட்டு நடக்கிறது. அதனால், கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பொதுமக்கள் கூறியதோடு, பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதோடு, இந்த லாரியில் தொடர்ந்து மணல் கடத்தப்பட்டுவருவதாகவும், இந்த மணல் கரூர் பகுதிக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும், லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுத்து லாரியைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் போலீஸாரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, லாரி டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். காவல்துறையினர் கொடுத்த உத்தரவாதத்தைத் தொடர்ந்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர், லாரியுடன் லாரி டிரைவரை விசாரணைக்காக போலீஸார் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.