கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்று திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில். 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் பெருமாள் அனந்த சயனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 108 வைணவ திருத்தலங்களில் 76–வது கோயிலாகும். இங்கு மூலவரை மூன்று வாசல்கள் வழியாக தரிசனம் செய்யலாம். அனந்த சயனத்தில் உள்ள பரந்தாமனின் விக்ரகம் தங்கத் தகடுகளால் பொதியப்பட்டிருந்தது.

1992–ம் ஆண்டு இந்தக் கோயிலின் முக்கிய பூசாரியான சீதாராமன் போற்றி இறந்ததைத் தொடர்ந்து, புதிய பூசாரியாகக் கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ணன் போற்றி நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்றதும் இருளடைந்த நிலையிலிருந்த கருவறையில் தலை மற்றும் கால் பகுதியில் இரண்டு விளக்குகளை ஏற்றிவைத்தார். அப்போதுதான் விக்ரகத்தில் தங்கத் தகடுகளுக்குப் பதிலாக தகரங்கள் வைக்கப்பட்டது தெரியவந்தது.
சுவாமி மீது பொதியப்பட்ட தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட தகவல் வெளியானதும் கீழ்சாந்தி கேசவன் போற்றியும் அவரின் மனைவியும் 1992 ஜூன் மாதத்தில் தற்கொலை செய்ய முயன்றனர். அதில் கேசவன் போற்றி இறந்தார், அவரின் மனைவி காப்பாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து அனந்தசயன விக்ரகத்தில் உள்ள பட்டாடைகளை அகற்றி தேவசம் போர்டு அதிகாரிகள் கணக்கு எடுத்தபோது சுவாமியின் முகத்தைத் தவிர மீதமுள்ள இடங்களில் உள்ள தங்கம் திருடப்பட்டது தெரியவந்தது. தேவசம்போர்டு ஆவணங்களின்படி மொத்தம் 11.500 கிலோ தங்கம் திருட்டு போயிருந்தது.

தினமும் காலையில் குளித்து பழம், பூஜைப் பொருள்களுடன் கோயிலுக்குச் சென்ற சிலருக்குப் பூஜைத் தட்டில் கேசவன் போற்றி தங்கத் தகடுகளைப் பிரசாதமாக வழங்கியது விசாரணையில் தெரியவந்தது. 1992–ல் இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் என்று கூறப்பட்டது. இதுகுறித்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள், கோயில் பூசாரிகள் என 34 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. விசாரணையின்போது பறிமுதல் செய்யப்பட்ட நான்கரை கிலோ தங்கம் கருவூலத்தில் இருப்பு வைக்கப்பட்டது.
தொடக்கத்தில் பத்மனாபபுரம் நீதிமன்றத்திலும், பின்னர் நாகர்கோவில் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடைபெற்றது. 27 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கு பதிவு செய்யப்பட்ட 34 பேரில் வயது முதிர்வு காரணமாகவும், தற்கொலை செய்துகொண்டும் 11 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும், ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் ஜனார்த்தன் போற்றி என்பவர் புழல் சிறையில் உள்ளார். இவர்கள் 12 பேர்களை தவிர்த்து மீதமுள்ள 22 பேரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அவர்கள் அனைவரையும் குற்றவாளிகள் என்று அறிவித்த நீதிபதி கிறிஸ்டியன் தண்டனை அறிவித்தார்.

அதன்படி அப்பன் என்ற ஸ்ரீஐயப்பன் (70), கோபாலகிருஷ்ணன் (68), அப்புக்குட்டன் (67), கேசவன் போற்றியின் மனைவி கிருஷ்ணாம்பாள் (70), முத்துக்குமார் (65), குமார் (68), முத்துநாயகம் (66), சுப்பிரமணியரரு (68), அறநிலையத்துறையைச் சேர்ந்த கோபிநாதன் நாயர் (69), மகாராஜபிள்ளை (71), கோபாலகிருஷ்ணன் (70), சங்கரகுற்றாலம் (69), முருகப்பன் (64), வேலப்பன்நாயர் (68) ஆகிய 14 பேருக்கு ஆறு ஆண்டு கடுங்காவல் தண்டனையும்,
சுரேந்திரன்(60), ஐயப்பன் ஆசாரி (64), ஆறுமுகம் ஆசாரி (59), புழல் சிறையில் உள்ள ஜனார்த்தன் போற்றி (67), அப்பாவு (62), மணிகண்டன்நாயர் (62), லட்சுமணன் (65), முத்துகிருஷ்ணன் ஆசாரி (67), அறநிலையத்துறையைச் சேர்ந்த கேசவராஜூ (68) ஆகியோருக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. இவர்களுக்கு ரூ.10,000 முதல் 3.70 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டது.