`பணி நெருக்கடி; மன்னித்துவிடுங்கள்’-வீடியோவில் கண்ணீர்; தற்கொலைக்கு முயன்ற கரூர் அங்கன்வாடி ஊழியர்

`என்னைத் தொடர்ந்து அவமானப்படுத்தியதால்தான் தற்கொலை செய்துகொள்கிறேன். அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள்' எனப் பேசியிருக்கிறார். பின்னர், அங்கிருந்து கிளம்பிய சந்தியா, இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையில் மயங்கிவிழுந்திருக்கிறார்.
அதிகாரிகள் இருவர் பணிநெருக்கடி கொடுத்ததன் காரணமாக, அங்கன்வாடி ஊழியர் ஒருவர், தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு முன்பு, தனது பிரனையைக் கண்ணீரோடு வீடியோவாகப் பேசி அனுப்பிவிட்டு, அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

கரூர் அருகேயுள்ள தொழிற்பேட்டை ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா (வயது 35). இவர், கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள புலியூர் அருகேயுள்ள வீரராக்கியம் குளத்துப்பாளையம் அங்கன்வாடி மையத்தில், அங்கன்வாடி ஊழியராக கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறார். நேற்று காலை 11 மணியளவில் அங்கன்வாடி மையத்துக்குப் பணிக்கு வந்திருந்த சந்தியா, `எனது தற்கொலைக்குக் காரணம் உயரதிகாரிகள்தான்' எனக் கடிதம் ஒன்றை எழுதிவைத்தார்.

அதோடு, தன்னையும், தனது குழந்தைகளையும் உயரதிகாரிகள் இருவர் அவமானப்படுத்தியதால், தற்கொலை செய்துகொள்வதாகக் கூறி வீடியோ ஒன்றைப் பதிவு செய்து, வாட்ஸ்அப் மூலம் அனுப்பியிருக்கிறார்.
அந்த வீடியோவில், தனக்கு உடல்நிலை சரியில்லாதபோது தொடர்ந்து பணியாற்றக் கோரி வற்புறுத்தியதாகவும், அப்படி பணியாற்றவில்லையென்றால் பணி மாறுதல், சம்பளக் குறைப்பு மேற்கொள்வோம்' என்று உயரதிகாரிகள் இருவர் மிரட்டியதாகவும் பேசியிருக்கிறார். அதோடு, அந்த இரண்டு அதிகாரிகளின் பெயர்களையும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், `என்னைத் தொடர்ந்து அவமானப்படுத்தியதால்தான் தற்கொலைக்கு முயல்கிறேன். அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள்' எனப் பேசியிருக்கிறார்.

பின்னர், அங்கிருந்து கிளம்பிய சந்தியா இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையில் மயங்கி விழுந்திருக்கிறார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சந்தியா தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். `பணி அழுத்தம் காரணமாக சந்தியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதால், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மற்றும் இளநிலை உதவியாளர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என சந்தியாவுடன் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர் குணா கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் குறித்து, வெள்ளியணை காவல் நிலைய போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். உயரதிகாரிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக, கரூர் அங்கன்வாடிப் பெண் ஊழியர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அங்கன்வாடி ஊழியர்களையும் அதிகாரிகளையும் அதிர்ச்சியடையவைத்திருக்கிறது.